தூத்துக்குடியில் கலைஞர் சிலை திறப்பு விழா தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் தப்ப முடியாது: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

தூத்துக்குடி: தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக அலுவலகம், கலைஞர் அரங்கம் முன்பு 8 அடி உயர வெண்கலத்தால் ஆன முன்னாள் முதல்வர் கலைஞர் திருவுருவச்சிலை திறப்பு விழா மற்றும் திமுக முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி நேற்று இரவு நடந்தது. கலைஞர் சிலையை திறந்து வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: உள்ளாட்சித் தேர்தல் வெற்றி, சாதாரண வெற்றி அல்ல. இதுவரை திமுக கண்டிராத வெற்றி. கலைஞர் வழிநின்று, அவர் எந்த உணர்வோடு பாடுபட்டாரோ, பணியாற்றியிருக்கிறாரோ, எதையெல்லாம் நமக்கு கற்றுத்தந்திருக்கிறாரோ அதனையெல்லாம் நிறைவேற்றுவோம் என்று உறுதியேற்றுக்கொள்ளும் நிகழ்ச்சியாக இந்த நிகழ்ச்சியை கருதுகிறேன். பல பொறுப்புகளை ஏற்றுக் கொண்டுள்ள உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு மட்டுமல்ல, சட்டமன்ற உறுப்பினராக இருந்தாலும் சரி, நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தாலும் சரி, முதலமைச்சராக இருக்கும் நானாக இருந்தாலும் சரி, இன்று எடுக்கும் உறுதிமொழி என்வென்றால், அறிஞர் அண்ணா மக்களோடு மக்களாக இருந்து பணியாற்று மக்களோடு மக்களாக இருந்து வாழ் என நமக்கு கற்றுத்தந்துள்ளார். அதை உணர்ந்து நாம் நமது கடமையையாற்ற உறுதியெடுத்துக் கொள்ளவேண்டும்.1996-ம் ஆண்டு சென்னை மாநகராட்சி தேர்தலில் வெற்றி பெற்று மேயராக பொறுப்பேற்றேன். அப்போது மக்கள் தந்து இருப்பது பதவி அல்ல, மக்கள் தந்து இருப்பது பொறுப்பு. அதனை உணர்ந்து பணியாற்று என்று கலைஞர் கூறினார். அதைத்தான் இன்று பொறுப்பேற்று உள்ள அனைவருக்கும் நினைவுபடுத்த கடமைப்பட்டு உள்ளேன். தொடர்ந்து கண்காணித்துக் கொண்டு இருப்பேன். எங்காவது ஒரு சிறு தவறு நடந்தாலும் யாராக இருந்தாலும் உரிய நடவடிக்கை உடனடியாக எடுப்பேன். மிரட்டுவதற்காக அல்ல, அச்சுறுத்துவதற்காக அல்ல, மக்கள் நம்மை நம்பி இந்த பொறுப்பை ஒப்படைத்து இருக்கிறார்கள். அவர்களின் நம்பிக்கையை நாம் காப்பாற்ற வேண்டும். அதற்காகத்தான்.நமது கூட்டணியில் இடம் பெற்று உள்ள கட்சிகளுக்கு சில இடங்களை ஒதுக்கி ஒப்படைத்தோம். அங்கு சில இடங்களில் தவறுகள் நடந்தது. அந்த தவறு நடந்த காரணத்தால் நான் வருத்தப்படுகிறேன், வேதனைப்படுகிறேன், கூனி குறுகி நிற்கிறேன். ஆகையால் அந்த தவறை செய்தவர்கள் உடனடியாக திருந்த வேண்டும். ராஜினாமா செய்து விட்டு வர வேண்டும். இல்லையென்றால் கட்சி உரிய நடவடிக்கை எடுக்கும் என்று கூறினேன். இது செய்திக்காகவோ, கூட்டணி கட்சியினரை திருப்தி படுத்துவதற்காகவோ அல்ல. தவறு செய்தவர்களை மிரட்டுவதற்காக அல்ல. நிச்சயமாக, உறுதியாக அவர்கள் செய்த தவறை உணர்ந்து திருந்தவில்லையென்றால் உரிய நடவடிக்கையை நான் எடுப்பேன் என்பதை தலைவர் கலைஞர் சிலையை திறந்து வைத்த உள்ள இந்த நேரத்தில் நான் உறுதி எடுத்து கொண்டு இருக்கிறேன். அண்ணா நமக்கு வகுத்து தந்து உள்ள தாரக மந்திரம் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு. அதனை தலைவர் கலைஞர் பலநேரங்களில் குறிப்பிட்டு சொன்னது உண்டு. கடமையை விட, கண்ணியத்தை விட கட்டுப்பாடுதான் மிக, மிக முக்கியம். அதனை கட்சியினர் கடைப்பிடிக்க வேண்டும் என்று கூறி உள்ளார். பல வெற்றிகள் வந்து சேரவேண்டும் என்றால், உள்ளாட்சி அமைப்புதான் காரணமாக இருக்க போகிறது. அதனை உணர்ந்து உள்ளாட்சியில் பல்வேறு பொறுப்புக்களை ஏற்று பணியாற்ற வந்து உள்ள அனைவரும் பணியாற்ற வேண்டும். நான் 6 மாதத்துக்கு பிறகு உங்களுக்கு பாராட்டு, நன்றி சொல்ல வேண்டும். அந்த வகையில் நீங்கள் பணியாற்ற வேண்டும். இந்த வெற்றிக்கு துணை நின்ற அனைத்து நிர்வாகிகளுக்கும், இந்த வெற்றியை ஒட்டுமொத்த பெரிய வெற்றியாக பெற்றுத்தந்து உள்ள தமிழக மக்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார். விழாவுக்கு மாநில மகளிரணி செயலாளர் கனிமொழி எம்பி தலைமை வகித்தார். அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, ராஜகண்ணப்பன், மேயர் ஜெகன் பெரியசாமிஉள்ளிட்டவர்கள் முன்னிலை வகித்தனர்….

Related posts

போலீசார், தொழிலதிபர் என 20 பேரை ஏமாற்றி திருமணம்: கல்யாண ராணி சிக்கினார்

ரூ.822 கோடி குத்தகை பாக்கி ஊட்டி குதிரை பந்தய மைதானத்திற்கு சீல்

திருச்சியில் வாலிபர் வெட்டி கொலை தப்பிய ரவுடியை சுட்டு பிடித்த போலீஸ்