தூத்துக்குடி, செப்.2: கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மில்லர்புரம், புனித மரியன்னை ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் 1 மணி வரை மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் நடைபெறுகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை, முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்திற்கான அட்டை, ஆதார் அட்டை ஆகியவை பெறாதவர்கள் இம்முகாமில் கலந்துகொண்டு பயன்பெறலாம். மேலும், பிற உதவி உபகரணங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வேண்டுவோரும் விண்ணப்பிக்கலாம். 90 சதவீதத்திற்கு அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகள், முதுகுத்தண்டு பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் தசை சிதைவால் பாதிக்கப்பட்டவர்கள் கூடுதல் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு தூத்துக்குடி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். இத்தகவலை மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.