துவரங்குறிச்சி, செப்.18: துவரங்குறிச்சி பேருந்து நிலையம் அருகே கோவில் மாடுகள் சண்டையிட்டுக் கொண்டதால் பொதுமக்கள் பதறி அடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி பகுதியில் அதிக அளவில் கோயில் மாடுகள் சுற்றித் திரிகின்றன. இந்நிலையில் நேற்று இரவு இரண்டு கோயில் மாடுகள் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக பேருந்து நிலையம் அருகே சண்டையிட்டு கொண்டதால் அப்பகுதியில் சென்ற இரு சக்கர வாகனங்கள் மற்றும் கார்களில் சென்றவர்கள், பொதுமக்கள் சற்று பயத்துடனையே சென்றனர்.
மேலும் சாலையோரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களையும் அந்த காளைகளை அக்ரோஷத்துடன் தனது கொம்பால் சூறையாடியது. இதனால் கடைகளில் பொருட்கள் வாங்கிக் கொண்டிருந்த பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். மேலும் கடைக்காரர்கள் செய்வதறியாது திகைத்து நின்றனர்.
அதனை தொடர்ந்து அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் கம்புகளை வைத்து இரண்டு மாடுகளையும் விரட்டி அடித்தனர். இதனால் சுமார் அரை மணி நேரம் பேருந்து நிலையம் பரபரப்பாக காணப்பட்டது. உரிய பாதுகாப்பின்றி சாலைகளில் திரியும் மாடுகளை பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.