துவரங்குறிச்சி, ஜூன் 22: துவரங்குறிச்சி அருகே சேதமடைந்த நிலையில் உள்ள மின்கம்பத்தை மாற்றக்கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி பொன்னம்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்டு சடவேலாம்பட்டி அமைந்துள்ளது. இங்கு உள்ள முருகன் கோயில் கிரிவலப் பாதையில் உள்ள மின்கம்பத்தில் சிமெண்ட் காரைகள் அனைத்தும் பெயர்ந்த நிலையில் கம்பிகள் மட்டும் தாங்கி நிற்கின்றன.
மேலும் இப்பகுதியில் பௌர்ணமி நேரங்களில் பொதுமக்கள் மோரணிமலையினை சுற்றி கிரிவலம் வருவது வழக்கம். மேலும் இப்பகுதியில் எண்ணற்ற குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் செல்லும் பொதுமக்கள் சற்று அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலை உள்ளதால் இப்பகுதியில் உள்ள சேதமடைந்த மின்கம்பத்தினை மாற்றி புதிதாக அமைக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.