துவரங்குறிச்சி அருகே கார் கண்ணாடியை உடைத்து பணம், ஏடிஎம் கார்டு திருட்டு

துவரங்குறிச்சி: துவரங்குறிச்சி அருகே காரின் கண்ணாடியை உடைத்து உள்ளே இருந்த பணம் மற்றும் ஏடிஎம் கார்டை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சியில் மணப்பாறை சாலையில் அரசுடமையாக்கப்பட்ட வங்கி உள்ளது. இந்த வங்கியில் நேற்று நகை ஏலம் அறிவித்திருந்த நிலையில் அதற்காக மன்னார்குடியைச் சேர்ந்த பிரகாஷ் மகன் விகாஸ் (42), ஜெயபாலன் மகன் முகிலன் (30), கார் ஓட்டுநர் ராஜேந்திரன் மகன் மாதவன் (27) மற்றும் பட்டுக்கோட்டையைச் சேர்ந்த சாமிநாதன் (60) ஆகிய நான்கு பேரும் நகை ஏலம் எடுப்பதற்காக காரில் வந்தனர். ஆனால் ஏலத்திற்கான நேரம் முடிந்ததால் ஏலத்தில் கலந்து கொள்ள முடியவில்லை. அதையடுத்து தேநீர் அருந்துவதற்காக காரை மணப்பாறை சாலையில் நிறுத்திவிட்டு உள்ளே சென்று தேநீர் அருந்திவிட்டு மீண்டும் வந்து காரை பார்க்கும்போது பின்பக்க இடது கண்ணாடி உடைக்கப்பட்டு காரின் உள்ளே வைக்கப்பட்டிருந்த பேக்கை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. மேலும் அந்த பேக்கில் ஏடிஎம் கார்டுகள் மற்றும் விகாஷ் என்பவருடைய பாஸ்போர்ட், டிரைவிங் லைசன்ஸ் கார் மற்றும் டூ வீலருக்கான ஆர்சி புக் ஆகியவையும், 7000 ரூபாயும் வைத்திருந்ததை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து துவரங்குறிச்சி போலீசில் அளித்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை