மதுரை, அக். 4: காஞ்சிபுரத்தில் நடந்த காவல்துறையினருக்கான துப்பாக்கி சுடும் போட்டிகளில், மதுரையை சேர்ந்த போலீசார் பதக்கங்கள், கேடயங்களை குவித்தனர். தமிழ்நாடு காவல்துறையினருக்கு 2024ம் ஆண்டுக்கான மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டிகள் இரு நாட்கள் காஞ்சிபுரம் மாவட்டம் ஒட்டிவாக்கம் பகுதியில் உள்ள கமாண்டோ பயிற்சி பள்ளி துப்பாக்கி சுடும் தளத்தில் நடந்தது. இப்போட்டியில் ரீபிள் சூட்டிங், கார்பன் கன் சூட்டிங், பிஸ்டல் அன்ட் ரிவால்வர் சூட்டிங் என, மூன்று பிரிவுகளாகவும், ஆண், பெண் போலீசாருக்கு தனித்தனியாகவும் நடந்தது.
இதில் தென்மண்டல அளவிலான ஆண்கள் அணி சார்பில் ரீபிள் சூட்டிங் பிரிவில் தங்கம் 1, வெண்கலம் 2 பதக்கங்களுடன், ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பிரிவில் 2ம் இடமும், கார்பன் கன் சூட்டிங் பிரிவில் தலா ஒரு தங்கம், வெள்ளி பதக்கங்களுடன் 3ம் இடமும், பிஸ்டல் அன்ட் ரிவால்வர் சூட்டிங் பிரிவில் தலா ஒரு தங்கம், வெள்ளி என மொத்தம் 7 பதக்கங்களை மதுரை போலீசார் வென்றனர். இதற்காக அவர்களுக்கு 2 கேடயங்கள் வழங்கப்பட்டது. இதையடுத்து போட்டியில் வெற்றி பெற்ற மதுரை நகர் போலீசார் பதக்கங்கள், கேடயங்களுடன் மதுரை நகர் போலீஸ் கமிஷனர் லோகநாதனை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.