பெ.நா.பாளையம், ஜூன் 10: துடியலூர் பகுதியில் மயங்கி விழுந்த மயிலை மீட்டு பொதுமக்கள் வனத்துறையிடம் ஒப்படைத்தனர். கோவை துடியலூர் காவல் நிலையம் எதிரில் உள்ள தோட்டத்து பகுதியில் நிறைய மாயில்கள் காணப்படுகின்றன. இந்நிலையில் நேற்று காலை அந்த பகுதியில் உள்ள தோட்டத்தின் அருகில் மயில் ஒன்று மயங்கிய நிலையில் கிடந்தது. இதை பார்த்த அப்பகுதி மக்கள் கேவை வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். அவர்கள் அங்கு மயங்கி கிடந்த மயிலை மீட்டனர். மேலும் மயிலுக்கு குடிக்க தண்ணீர் கொடுத்தனர். இதையடுத்து சிறிது நேரத்தில் மயில் மயக்கத்தில் இருந்து மீண்டது.
இதைத்தொடர்ந்து மடத்தூர் கால்நடை மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டு மருத்துவர்களின் கண்காணிப்பில் வைக்கப்பட்டது. மேலும் வனத்துறையினர் கூறுகையில், ‘‘தோட்டப்பகுதியில் மீட்கப்பட்ட மயில் 1 வயது மதிக்கத்தக்க பெண் மயில் என்றும் அதன் வாயில் ரத்தம் வருவதால், தோட்டங்களில் உணவு தேடி வரும் போது பூச்சிகொல்லி மருந்தை சில சமயங்களில் சாப்பிட்டு விடுவதால் இது போன்று ரத்தம் வந்து மயங்கி விழுந்து விடும் என்றும் சரியான நேரத்தில் மீட்கப்பட்டு சிகிச்சை தரப்பட்டதால் மயில் குணமடைந்து வருகிறது’’ என தெரிவித்தனர்.