குவாலத்: ஆப்கானிஸ்தானை தீவிரவாத அமைப்பான தாலிபான் தன்வசப்படுத்தியுள்ள நிலையில் ஆயுதம் ஏந்திய தீவிரவாதிகள் பல்வேறு நகரங்களில் அடையாள அணிவகுப்பு நடத்தி வருவது நாடு முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகள் ஆப்கானில் இருந்து வெளியேற தொடங்கியதும் அதிரடி தாக்குதல் மூலம் தாலிபான் அமைப்பினர் ஆப்கானை கைப்பற்றினர். இதையடுத்து பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபடப்போவதில்லை என்று அறிவித்த தாலிபான்கள், அனைத்து தரப்பினரின் பங்களிப்புடன் கூடிய அரசை ஏற்படுத்துவதாக உறுதி அளித்தனர். ஆனால் சில நாட்களிலேயே உறுதிமொழியை காற்றில் பறக்கவிட்ட தாலிபான்கள், தீவிரவாத பாதைக்கு மீண்டும் திரும்பியுள்ளனர். பத்கிஸ் மாகாண காவல்துறை தலைவரை சுட்டுக்கொன்றனர். காஸ்னி மாகாணத்தில் தாலிபான் ஆட்சி எதிர்த்த 9 பேர் சுட்டுக்கொல்லப்பட்டதாக அம்னிஸ்ட் இன்டர்நேஷனல் அமைப்பு தெரிவித்துள்ளது. இதனிடையே தங்களுடைய ஆதிக்கத்தை உணர்த்தும் விதமாக ஜாபுல் மாகாணத்தில் உள்ள குவாலத் நகரத்தில் ஆயுதம் ஏந்திய தாலிபான் தீவிரவாதிகள் அடையாள அணிவகுப்பு நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் தாலிபான் தீவிரவாதிகளின் அதிகாரபூர்வ இணையதளங்கள் முடக்கப்பட்டுள்ளன. ஆங்கிலம், உருது, அரபு, பஷ்டோ, டரி உள்ளிட்ட மொழிகளில் உள்ள தாலிபான்களின் இணையதளங்களே முடக்கப்பட்டவையாகும். தாலிபான்கள் பயன்படுத்தி வந்த ஃபேஸ்புக், வாட்ஸ் அப் கணக்குகள் முடக்கப்பட்ட நிலையில் தற்போது தாலிபான்களின் அதிகாரபூர்வ இணையதள பக்கங்களும் முடக்கப்பட்டுள்ளன. தாலிபான்களின் இணையதள பக்கங்கள் யாரால் முடக்கப்பட்டன என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. …