தீராத சர்க்கரை நோயால் விரக்தி தந்தை, மகன் தூக்கிட்டு தற்கொலை: உருக்கமான கடிதம் சிக்கியது

அண்ணாநகர்: கோயம்பேடு சேமாத்தம்மன் நகர் 1வது தெருவை சேர்ந்தவர் கங்காதரன் (77). இவரது மனைவி கோவிந்தம்மாள் (70). இவர்களது மகன் ஞானம் (53), மகள் சாமந்தி (45). இதில் மகனுக்கு திருமணமாகவில்லை. சாந்தி திருமணமாகி தனது குடும்பத்துடன் தரை தளத்தில் வசித்து வருகிறார். கோவிந்தம்மாள் இறந்த நிலையில், கங்காதரன் தனது மகனுடன் முதல் தளத்தில் வசித்து வந்தார்.இவர்கள் இருவரும் கடந்த 12 வருடங்களாக சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வந்துள்ளனர். நேற்று முன்தினம் தந்தை மற்றும் சகோதரனுக்கு சாப்பாடு கொடுப்பதற்காக சாமந்தி முதல் தளத்திற்கு சென்றார். அங்கு கதவு உள்பக்கமாக தாழிட்டு இருந்தது. நீண்ட நேரம் கதவை தட்டியும் திறக்கவில்லை. இதையடுத்து ஜன்னல் வழியாக பார்த்தபோது, தந்தையும், சகோதரனும் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது.இதனை பார்த்த சாமந்தி அலறி கூச்சலிட்டார். சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் இதுபற்றி கோயம்பேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், விரைந்து வந்த போலீசார், கதவை உடைத்து உள்ளே சென்று, இருவர் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.பின்னர், அந்த அறையை சோதனை செய்தபோது, ஞானம் எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்று இருந்தது. அதில், ‘‘நாங்கள் எடுத்த இந்த முடிவுக்கு யாரும் காரணம் இல்லை. எங்களின் உடல் நிலை மிகவும் மோசமாக உள்ளதாலும், சகோதரிக்கு தொல்லை கொடுக்க வேண்டாம் என்ற எண்ணத்திலும் இந்த முடிவுக்கு வந்தோம்,’’ என எழுதப்பட்டு இருந்தது. இதுதொடர்பாக தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.  சர்க்கரை வியாதியால் தந்தை, மகன் தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது….

Related posts

தமிழ்நாட்டில் இரவு 10 மணிக்குள் சென்னை உட்பட 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

பாஜ பிரமுகர் தொடர்பு உள்ள தங்க கடத்தல் விசாரணையில் தொய்வு

சேலத்தில் பால் கேனுக்கு வெல்டிங் வைத்தபோது விபத்து: 2 பேர் படுகாயம்