ஈரோடு, ஜூலை 31: தீரன் சின்னமலை நினைவு நாள் நிகழ்ச்சிக்கு வருபவர்கள் பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இடையூறு செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் ஈரோடு எஸ்பி ஜவகர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: ஈரோடு மாவட்டத்தில் குற்ற செயல்களை தடுக்க கூடுதலாக கிரைம் பிரிவு போலீசார் எண்ணிக்கை அதிகப்படுத்தப்படும். ஈரோடு மாவட்டத்தில் டவுன் பகுதியில் அனைத்து இடங்களில் போதுமான அளவு சிசிடிவி கேமராக்கள் உள்ளன.
சத்தியமங்கலம், பெருந்துறை உள்ளிட்ட பகுதிகளில் சிசிடிவி கேமரா பொருத்தும் பகுதிகளை விரிவுப்படுத்தியுள்ளோம். பஸ் ஸ்டாண்ட் பகுதிகளில் கூடுதலாக சிசிடிவி கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம் அறச்சலூர் ஓடாநிலையில் தீரன் சின்னமலை நினைவு நாள் நிகழ்ச்சிக்கு வருபவர்கள் பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் எவ்வித தொந்தரவும் செய்யக்கூடாது என கலெக்டர் தலைமையில் நடந்த கூட்டத்தில் அறிவுறுத்தியுள்ளோம். இதனை மீறி ஏதேனும் இடையூறு ஏற்படும் விதத்தில் செயல்பட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.