தீபாவளி பண்டிகையை முன்னிட்டு குறைந்த ஒலி எழுப்பும் பசுமை பட்டாசுகளை வெடிக்க வேண்டும்

கரூர், அக். 21: கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் வருகிற தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சுற்றுச்சூழலுக்கு அதிக மாசு ஏற்படுத்தாத பட்டாசுகளை அரசு அனுமதித்துள்ள நேரத்தில் உரிய இடங்களில் கூட்டாக பட்டாசு வெடித்து மாசற்ற தீபாவளியை கொண்டாட வேண்டும் என்று கலெக்டர் தங்கவேல் கேட்டுக்கொண்டுள்ளார்.

கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
தீபாவளி திருநாள் மக்களால் மகிழ்ச்சியாக கொண்டாடப்படும் விழாவாகும். இந்த நாளில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியை வெளிபடுத்துவார்கள். இதே வேளையில், பட்டாசுகளை வெடிப்பதால் நம்மை சுற்றியுள்ள நிலம், நீர், காற்று உள்ளிட்டவை மாசுபடுகிறது. பட்டாசு வெடிப்பதால் எழும் அதிகப்படியான ஒலி மற்றும் காற்று மாசினால் சிறுகுழந்தைகள், வயதான பெரியோர்கள் மற்றும் நோய்வாய்ப்பட்டுள்ள வயோதிகர்கள் உடல் அளவிலும், மனதளவிலும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.

பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனைக்கு தடை கோரி நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொது நல வழக்கில், நீதிமன்றம், சுற்றுச்சூழலுக்கு உகந்த மூலப்பொருட்களை பயன்படுத்தி பட்டாசுகளை உற்பத்தி செய்ய வேண்டும் எனவும், வரும் காலத்தில் பசுமைப் பட்டாசுகளை உற்பத்தி செய்து விற்பனை செய்ய வேண்டும் எனவும் நிபந்தனையை விதித்தது.
மேலும், அந்த ஆணையில், பட்டாசுகளை வெடிப்பதால் காற்றின் தரம் பாதிக்கப்படுவது குறித்து போதுமான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும், திறந்த வெளியில் குறிப்பிடப்பட்ட பகுதிகளில் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க மாநில அரசுகள் வலியுறுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.

நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், அரசு கடந்த நான்கு ஆண்டுகளாக தீபாவளி அன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிப்பதற்கு நேர நிர்ணயம் செய்து அனுமதி வழங்கியது. இந்தாண்டு தீபாவளி பண்டிகை தினத்தன்று, கடந்தாண்டை போலவே காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.

மேலும், பட்டாசுகளை வெடிப்பதால் ஏற்படும் சூற்றுச்சூழல் சீர்கேடு குறித்தும், உடல்நலனில் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், போதிய அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்த தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி, மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் தேசிய பசுமை படைகள், பசுமை மன்றங்கள் மற்றும் தன்னார்வ நிறுவனங்கள் மூலம் பொதுமக்களிடையே தேவையான விழிப்புணர்வு ஏற்படுத்த பள்ளி கல்வித்துறை, உயர்கல்வித்துறை மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர் ஆகிய துறைகளின் செயலாளர்கள், காவல்துறை இயக்குநர், அனைத்து மாவட்ட கலெக்டர்கள், சுற்றுச்சூழல் துறை இயக்குநர், மாநகராட்சி ஆணையர்கள் மற்றும் உயர்அதிகாரிகள் ஒத்துழைப்போடு அனைத்து மாவட்டங்களிலும் விழிப்புணர்வு ஏற்படுத்த மாசு கட்டுப்பாட்டு வாரியம் மூலம் தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாவட்ட அளவில் உச்சநீதிமன்றம் உத்தரவின்படி நடவடிக்கை எடுக்க அனைத்து மாவட்ட கலெக்டர்களும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மூலம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்கள்.

சுற்றுச்சூழலை பாதிப்பு இல்லாமல் பேணிக் காப்பது நம் அனைவரின் கடமையும், பொறுப்பும் ஆகும். இதனை கருத்தில் கொண்டு, பொதுமக்கள் பல்வேறு நடைமுறைகளை கடைபிடிக்க வேண்டும். அதன்படி, பொதுமக்கள் குறைந்த ஒலியுடனும், குறைந்த அளவில் காற்று மாசுபடுத்தும் தன்மையும் கொண்ட பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும். மாவட்ட நிர்வாகம், உள்ளாட்சி அமைப்புகளின் முன் அனுமதியுடன் பொதுமக்கள் திறந்த வெளியில் ஒன்று கூடி பட்டாசுகளை வெடிப்பதற்கு அந்தந்த பகுதிகளில் உள்ள நலச்சங்கங்கள் மூலம் முயற்சிக்க வேண்டும்.

மேலும், அதிக ஒலி எழுப்பும் மற்றும் தொடர்ச்சியாக வெடிக்க கூடிய சரவெடிகளை தவிர்க்க வேண்டும். மருத்துவமனைகள் வழிபாட்டு தலங்கள், அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும். குடிசை பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசுகளை வெடிப்பதை தவிர்க்க வேண்டும்.

எனவே, பொதுமக்கள் சுற்றுச்சூழலுக்கு அதிக மாசு ஏற்படுத்தாத பட்டாசுகளை அரசு அனுமதித்துள்ள நேரத்தில் உரிய இடங்களில் கூட்டாக பட்டாசு வெடித்து மாசற்ற தீபாவளியை கொண்டாட வேண்டும். இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

சட்டப்பேரவை குழு விருதுநகரில் இன்று ஆய்வு

நரிக்குடி அருகே ரேஷன் பொருட்கள் வாங்க கண்மாய் நீரை கடந்து செல்லும் கிராமமக்கள்: ஊரில் புதிய கடை திறக்கப்படுமா?

சிவகாசியில் மாநில அளவிலான கராத்தே போட்டி