திருவண்ணாமலை, ஜூலை 25: திருவண்ணாமலை எஸ்பி அலுவலகத்தில் வாராந்திர சிறப்பு குறைதீர்வு கூட்டம் நேற்று நடந்தது. அப்போது தீபாவளி சீட்டு கட்டிய பணத்தை திருப்பி தராமல் அலைக்கழிக்கின்றனர். பணத்தை மீட்டு தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தனர். திருவண்ணாமலை எஸ்பி அலுவலகத்தில், வாரந்தோறும் புதன்கிழமையன்று சிறப்பு குறைதீர்வு கூட்டம் நடக்கிறது. போலீஸ் ஸ்டேஷன்களில் தங்கள் புகார் மனுக்களுக்கு தீர்வு கிடைக்காத பொதுமக்கள், இக்கூட்டத்தில் மனு அளித்து பயன்பெறுகின்றனர். அதன்படி, திருவண்ணாமலை எஸ்பி அலுவலகத்தில், சிறப்பு குறைதீர்வு கூட்டம் நேற்று ஏடிஎஸ்பி சவுந்திரராஜன் தலைமையில் நடந்தது. அதில், டிஎஸ்பி சாந்தலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நேற்று நடந்த முகாமில் 32 மனுக்கள் பெறப்பட்டன. அதில், பெரும்பாலான மனுக்கள் குடும்ப பிரச்னை மற்றும் பாகப்பிரிவினை சொத்து தகராறு குறித்து அளிக்கப்பட்டன. எனவே, இதுபோன்ற சிவில் வழக்குகள் தொடர்பான மனுக்களுக்கு நீதிமன்றம் மூலம் தீர்வு காண ஏடிஎஸ்பி அறிவுறுத்தினார். மேலும், வேட்டவலம் பகுதியை சேர்ந்த சிலர் தீபாவளி சீட்டு மோசடியால் பாதிக்கப்பட்டதாக புகார் மனு அளித்தனர். கடந்த ஆண்டு தீபாவளி சேமிப்பு சீட்டில் சேர்ந்து உரிய தொகையை செலுத்தி முடித்த பிறகு இதுவரை செலுத்திய பணத்தை திருப்பி தராமல் அலைக்கழிக்கின்றனர். சீட்டு பணத்தை பெற்றுத்தர வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டிருந்தனர். அதேபோல், செய்யாறு பகுதியை சேர்ந்த 2 பேர் கடன் பிரச்னை தொடர்பாக மனு அளித்தனர். இந்த மனுக்கள் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்த ஏடிஎஸ்பி உத்தரவிட்டார்.