Tuesday, September 24, 2024
Home » திறமைசாலியான, கூர்மையான அறிவுத்திறன் படைத்த தமிழக இளைஞர்களை ஐடி நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்: தகவல் தொழில்நுட்ப மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை

திறமைசாலியான, கூர்மையான அறிவுத்திறன் படைத்த தமிழக இளைஞர்களை ஐடி நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்: தகவல் தொழில்நுட்ப மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை

by kannappan

சென்னை: திறமைசாலியான, கூர்மையான அறிவுத்திறன்  படைத்த இளைஞர்களாக தமிழக இளைஞர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு  கூடுதலான திறன் பயிற்சிகள் கொடுத்து, அவர்களை ஐ.டி. நிறுவனங்கள்  பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தகவல் தொழில்நுட்ப மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். இந்திய அரசின் தகவல் தொழில்நுட்ப துறையும், தமிழக அரசின் எல்காட் நிறுவனமும், இந்திய தொழில் கூட்டமைப்பும் இணைந்து நடத்தக்கூடிய தகவல் தொழில்நுட்ப 2 நாள் மாநாடு சென்னையில் நடந்தது. இதில் கலந்துகொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:இன்றைய உலகத்தையே ஆட்சி செய்வது ஓரெழுத்து மந்திரம் தான். அதுதான் ‘e’ என்பதாகும். அந்த ஓரெழுத்து மந்திரத்துக்காக நடைபெறக்கூடிய மாநாடு இந்த மாநாடு. எது இல்லாமல் வேண்டுமானாலும் வாழ்ந்துவிடலாம் -ஆனால் இண்டர்நெட் இல்லாமல் யாரும்  வாழ முடியாது, இருக்க முடியாது என்ற ஒரு சூழ்நிலை இப்போது ஏற்பட்டிருக்கிறது. தொழில்நுட்பத்தின் கட்டுப்பாட்டுக்குள் நாம் வந்துவிட்டோம். கல்வித்துறை, போக்குவரத்துத் துறை, பொறியியல் துறை, மருத்துவத் துறை, பொழுதுபோக்குத் துறை, வங்கித் துறை, பாதுகாப்புத் துறை – இப்படி எந்த துறையாக இருந்தாலும் அது தகவல் தொழில்நுட்ப துறையைச் சார்ந்தே இயங்க வேண்டும் என்ற ஒரு சூழல் ஏற்பட்டிருக்கிறது. எனக்கு 1996ம் ஆண்டுதான் நினைவுக்கு வருகிறது. தகவல் தொழில்நுட்பம் என்பது அரும்பாக வளர்ந்த காலத்தில் தமிழ்நாட்டின் முதல்வராக இருந்தவர் அன்றைக்கு அந்தப் பொறுப்பேற்று பணியாற்றியவர் கலைஞர். அப்போது, நான் சென்னை மாநகர மேயராக இருந்தேன். தகவல் தொழில்நுட்பத்தை கழக ஆட்சியின் மிக முக்கியக் குறிக்கோளாக மாற்றி, 1996ம் ஆண்டு ஆட்சியின்போது தகவல் தொழில்நுட்பப் புரட்சியைச்  செய்தவர் தான் அன்றைய முதல்வராக இருந்த கலைஞர். IT Professionals என்று சொல்லக்கூடிய தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் ஏராளமாக உருவாக காரணமாக இருந்தவர் கலைஞர். தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் நாடி வந்து தேர்வு செய்யக்கூடிய முதல் நகரமாக சென்னையை மாற்றிக் காட்டிய  ஆட்சி திமுக ஆட்சி. தகவல் தொழில்நுட்பத்துக்காக, தனித் துறையை 1998ம் ஆண்டு உருவாக்கிய ஆட்சியும் திமுக ஆட்சி தான். முதல்வர் கலைஞர் தலைமையில், IT Task Force என்ற அமைப்பு அன்று உருவாக்கப்பட்டது. அரசுத் துறையை கணினிமயமாக்கினார். பள்ளிக்கல்வியில் தகவல் தொழில்நுட்பத்தை இணைத்தார். இந்த சாதனைகளுக்கான சாட்சி தான் இன்று தரமணியில் கம்பீரமாகக் காட்சியளிக்கக் கூடிய டைடல் பார்க் என்பதை யாரும் மறந்துவிட முடியாது.   24 ஆண்டுகளுக்கு முன்னால் 340 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அந்த டைடல் பார்க் கட்டப்பட்டது. சென்னை தரமணி முதல் மாமல்லபுரம் வரை இருக்கக்கூடிய சாலையை ஐ.டி. சூப்பர் ஹைவே சாலையாக மாற்றி அமைத்த ஆட்சியும் கலைஞர் தலைமையில் இருந்த திமுக ஆட்சி தான். தமிழ்நெட் என்ற இணையக் கருத்தரங்க மாநாட்டினை 1999ம் ஆண்டு நடத்தியிருக்கிறோம். உலகத் தமிழ் இணைய பல்கலைக்கழகத்தை அமைத்தோம். அரசு மேனிலைப் பள்ளிகளில் கணினி மையம் தொடங்கினோம். 1996க்கு முன்னால் தமிழ்நாட்டில் இருந்த மென்பொருள் நிறுவனங்களின் எண்ணிக்கை 34. திமுக அரசின் ஐந்தாண்டு காலத்தில் அதன் எண்ணிக்கை 666 ஆக மாறியது. இத்தகைய சாதனையை தமிழ்நாட்டில் நிகழ்த்திக் காட்டிய ஆட்சிதான் கலைஞர் தலைமையிலான திமுக ஆட்சி. இன்று இத்தகைய மாநாட்டை நடத்துகிறோம் என்றால், அதற்கு 25 ஆண்டுகளுக்கு முன்னால் அடித்தளம் அமைத்த ஆட்சிதான் திமுக ஆட்சி. இது தகவல் தொழில்நுட்ப யுகம் ஆகும். கண்டுபிடிப்புகளின் காலமாகும். தகவல் தொழில்நுட்பம்தான் இன்று காலத்தைச் சுழல வைத்துக் கொண்டு இருக்கிறது. கணினி அறிவியலும்-தகவல் தொழில்நுட்பமும் இல்லாமல் எதுவும் இல்லை என்ற ஒரு சூழல் உருவாகி இருக்கிறது. ஒரு மாநிலத்துக்கு மிகப்பெரிய முன்னேற்றங்களையும் முதலீடுகளையும் கொண்டு வருவதில் தகவல் தொழில்நுட்பத் துறைதான் முன்னணி வகிக்கிறது. தேவையையும் – தொலைநோக்குப் பார்வையையும்- அதன் மூலமாக வளர்ச்சியையும்-வேலை வாய்ப்பையும் அதிகரிப்பதாக இந்த மாநாடு அமைய வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை.இந்த துறையில் புதிய முதலீட்டாளர்களுக்கான வாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும். பயன்படுத்தப்படக்கூடிய தொழில்நுட்பங்கள் புதியதாக மாற வேண்டும். புதிய திறன்கள் உருவாக வேண்டும். அந்த அடிப்படையில் ஏராளமான வேலைவாய்ப்புகள் உருவாகி, தனி மனிதர்களையும் நிறுவனங்களையும், அதன் மூலமாக மாநிலத்தையும், நாட்டையும் பரவலாக வளர்ப்பதற்கு அது அமைய வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள மனித வளத்தை, அறிவுச் சக்தியாக பயன்படுத்திக் கொள்ளத்தக்க உங்களது நிறுவனங்களை வடிவமைக்க வேண்டும். படித்தவர்கள், பட்டம் பெற்றவர்கள் என்பதோடு நிற்காமல் – அறிவாளிகளும் திறமைசாலிகளுமே இதற்கு தேவை. அத்தகைய திறமைசாலியான, கூர்மையான அறிவுத்திறன் படைத்த இளைஞர்களாக தமிழ்நாட்டு இளைஞர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு கூடுதலான திறன் பயிற்சிகள் கொடுத்து அவர்களை உங்கள் நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தகவல் தொழில்நுட்பத் துறையில் இந்தியாவிலேயே முன்னணி மாநிலமாகத் தமிழ்நாடு இருக்கிறது. உலக அளவில் கவனத்தை ஈர்க்கக்கூடிய மாநிலமாகவும் தமிழ்நாடு இருக்கிறது. தகவல் தொழில் வன்பொருள் உற்பத்தி,    மென்பொருள் உற்பத்தி, செல்போன் உற்பத்தி, அடிப்படை தேவையான மின்னணுவியல், கணினி உற்பத்தி, கணினித் தயாரிப்புக்கு தேவையான பொருட்கள்-என அனைத்திலும் முழுமையான அடித்தளம் கொண்ட மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது.  நாட்டிலேயே மின்னணுப் பொருட்கள் ஏற்றுமதி செய்யும் முக்கிய மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று. இந்தியாவின் மொத்த எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தியில் 16 விழுக்காட்டை சார்ந்தது தமிழ்நாடு. கணினி, மின்னணுவியல் மற்றும் ஆப்டிகல் தயாரிப்புகள் தயாரிப்பில் இந்தியாவில் 2வது இடத்தில் இருக்கிறோம். எலக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதியில் இந்தியாவில் 3வது இடத்தில் இருக்கிறோம். உற்பத்தித் திறனின் வலுவான முதுகெலும்பில் தமிழ்நாடு இந்தியாவின் மின்னணு உற்பத்திச் சேவை மையமாகவும் உருவெடுத்திருக்கிறது. தகவல் தொழில்நுட்ப துறையில் வளர்ச்சிக்கான புதிய வாய்ப்புகளைப் பயன்படுத்தி, முதல் இடத்தைத் தக்க வைத்துக் கொள்ளவும், மேம்படுத்தவும் தமிழ்நாடு அரசு தீவிரமாக முயற்சி செய்துகொண்டிருக்கிறது. டேட்டா சென்டர்களை அமைப்பதில் இந்தியாவிலேயே தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது. டேட்டா சென்டர்களில் முதலீடுகளை செயல்படுத்துவதற்கு ஒரு கொள்கை அறிக்கையை இன்று நாம் வெளியிட்டிருக்கிறோம். அதேபோல், தரவுகளை அடிப்படையாகக் கொண்ட கொள்கை வடிவமைத்தலில், மாநிலத்தின் திறனை மேம்படுத்தக்கூடிய நோக்கத்தோடு, சென்னை கணிதவியல் கழகத்துடன் தமிழ்நாடு மின் ஆளுமை முகமை ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்திலே கையொப்பம் இட்டுள்ளதற்காக நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். பாரத்நெட் திட்டம், மாநிலத்தின் 12,525 கிராம ஊராட்சிகளையும் குறைந்தபட்சம் 1 GBPS அதிவேக இணைப்புடன் இணைக்கச் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், அனைத்து கிராம ஊராட்சிகளுக்கும் தரமான டிஜிட்டல் சேவைகள், இணையவழிக் கல்வி, டெலிமெடிசின் மற்றும் டிரிபிள்-ப்ளே சேவைகள் கிடைக்கும். அரசு அலுவலகம், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு அதிவேக இணைய சேவைகள் கிடைக்கும். இதன் மூலமாக, கிராமப்புறங்கள் வளர்ச்சி அடையும். தகவல் மற்றும் தொழில்நுட்பத் துறையானது நமது லட்சியமான 1 டிரில்லியன் டாலர் இலக்கை அடைய உதவும் என்பதையும், இந்த முன்னேற்றத்தில் கனெக்ட் மிகவும் வலுவான பங்கை வகிக்கும் என்பதை உறுதியாக நம்புகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தகவல் தொழில்நுட்பத் துறை கண்காட்சியை திறந்து வைத்து, தமிழ்நாடு தரவு மையக் கொள்கையை வெளியிட்டு, கல்லூரிகளுக்கிடையே நடந்த தொழில்நுட்பத் திறன் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுத் தொகைக்கான காசோலைகளை வழங்கி, சிறந்த தொழில் நிறுவனங்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது உள்ளிட்ட விருதுகளையும்  வழங்கினார். மாநாட்டில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ், தகவல் தொழில்நுட்பத்துறை செயலாளர் நீரஜ் மிட்டல், இந்திய மென்பொருள் தொழில்நுட்பப் பூங்கா இயக்குநர் சஞ்சய் தியாகி, ‘சைன்ட்’ துணைத் தலைவர் பி.வி.ஆர். மோகன் ரெட்டி, கனெக்ட் தலைவர் ஜோஷ் ஃபோல்கர், இந்திய தொழில் கூட்டமைப்பின் தமிழக தலைவர் எஸ்.சந்திரகுமார், எல்காட் மேலாண்மை இயக்குநர் அஜய் யாதவ் மற்றும் இந்திய தொழில் கூட்டமைப்பின் உறுப்பினர்கள், துணை தூதர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.* தகவல் தொழில்நுட்பத்தை கழக ஆட்சியின் மிக முக்கிய குறிக்கோளாக மாற்றி, 1996ம் ஆண்டு தகவல் தொழில்நுட்ப புரட்சியை செய்தவர் அன்றைய முதல்வர் கலைஞர். * தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் நாடி வந்து தேர்வு செய்யக்கூடிய முதல் நகரமாக சென்னையை மாற்றிக் காட்டிய ஆட்சி திமுக ஆட்சி….

You may also like

Leave a Comment

two × four =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi