திருவையாறு: தஞ்சை மாவட்டம் திருவையாறு அந்தணர்குறிச்சியில் நந்தியம்பெருமான் பிறப்பு விழா நேற்று நடைபெற்றது. விழாவில் நந்தியம்பெருமானுக்கு சந்தனம், மஞ்சள், தயிர், தேன், பால், இளநீர் போன்ற திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகங்கள், தீபாராதனை நடைபெற்றது. நந்தியம்பெருமாளுக்கு ஐயாறப்பர் அறம்வளர்த்த நாயகி, அம்மாளுடன் காட்சி அளித்தார். அதனைதொடர்ந்து நேற்று மாலை அறம்வளர்த்தநாயகி உடனாகிய அய்யாறப்பர் ஆலயத்தில் நந்தியம்பெருமானுக்கு பட்டாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு நந்தியம் பெருமானை வழிப்பட்டனர்.இன்று (9ம் தேதி) அதிகாலை 5.30 மணியளவில் ஐயாறப்பர் கோயிலிலிருந்து ஐயாறப்பர் அம்பாள், அறம்வளர்த்தநாயகியுடன் கண்ணாடி பல்லக்கிலும், நந்தியம்பெருமான் பட்டுவேட்டி, பட்டுசட்டை அணிந்து மாப்பிள்ளைகோலத்தில் குதிரை வாகனத்தில் அமர்ந்து வாணவேடிக்கை, இன்னிசை கச்சேரியுடன் திருவையாறிலிருந்து புறப்பாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். சுவாமி தில்லைஸ்தானம், கடுவெளி, வைத்தியநாதன்பேட்டை வழியாக கொள்ளிடம் ஆற்றில் இறங்கி அரியலூர் மாவட்டம் திருமழாபாடிக்கு சென்றடைகிறார்.திருமழாப்பாடியில் இரவு வைத்தியநாதன் சுவாமி கோயிலில் நந்தியம் பெருமானுக்கும் சுயசாம்பிகைக்கும் திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது. நந்தி பார்த்தால் முந்தி கல்யாணம் என்று சொல்வார்கள். இதை முன்னிட்டு சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராம மக்கள் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமிதரிசனம் செய்வார்கள். பிறகு சாமி புறப்பட்டு திருவையாறை வந்தடையும்….