திருவாரூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு 28 மாத காலத்தில்

திருவாரூர், செப். 27: திருவாரூர் மாவட்டத்தில் கடந்த 28 மாத காலத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 15 ஆயிரத்து 781 பயனாளிகளுக்கு ரூ.27 கோடியே 61 லட்சம் மதிப்பில் நலத்திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் 15 நாட்களுக்கு ஒரு முறை கோட்ட அளவில் குறைதீர்க்கப்படுகிறது. நலவாரியமும் அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் திராவிட மாடல் ஆட்சி செய்து வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின் மாற்றுதிறனாளிகளின் முன்னேற்றத்திற்கு தனிகவனம் செலுத்தி வருகிறார். அதன்படி, 21 வகையான மாற்றுத்திறனாளிகள் அடையாளம் காணப்பட்டு, அவர்களுக்கான அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது.

மனவளர்ச்சி குன்றியோர், கடும் ஊனத்தால் பாதிக்கப்பட்டோர், தசைசிதைவு நோயால் பாதிக்கப்பட்டோர், தொழுநோயால் பாதிக்கப்பட்ட மற்றும் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டோர், பார்கின்சன் நோய், தண்டுவட மரப்பு நோய் ஆகிய நாள்பட்ட நரம்பியல் பாதிப்புக்குள்ளான மாற்றுத்திறனாளிகளுக்கு பராமரிப்பு உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ், திருவாரூர் மாவட்டம் முழுவதும் 4 ஆயிரத்து 709 பயனாளிகளுக்கு மாதம் தலா ரூ.1,500 வீதம் உதவிதொகை – வழங்கப்பட்டு வருகிறது.

சிறு, குறு, நடுத்தரமான மாற்றுத்திறனாளிகள் சுயதொழில் புரிந்து தங்களது பொருளாதாரத்தை உயர்த்திக் கொள்வதற்கு மானியத்துடன் கூடிய வங்கிகடன்களும் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் 5 வயதிற்குட்பட்ட மாற்றுதிறன் குழந்தைகளுக்கு மதியம் ஊட்ட சத்து சத்துணவு வழங்கும் திட்டம் மற்றும் 6 வயதுவரை உள்ள மனவளர்ச்சிக் குன்றியோர்க்கான மற்றும் காது கேளாதவர்களுக்கான ஆரம்பகால பயிற்சி மையமும் நடத்தப்பட்டு வருகிறது.
பெட்ரோல் ஸ்கூட்டர், 3 சக்கர சைக்கிள், மடக்கு சக்கர நாற்காலி, சிறப்பு சக்கர நாற்காலி, கருப்பு கண்ணாடி, பார்வையற்றோருக்கான கைகடிகாரம் மற்றும் பிரெய்லி மூலம் வாசிக்கும் கருவி, ஊன்றுகோல், செயற்கை கை, கால்கள், காதொலி கருவி, இலவச தையல் இயந்திரம் உட்பட மொத்தம் 18 வகையான உபகரணங்களும் வழங்கப்பட்டு வருகின்றன.

இதுமட்டுமின்றி இலவச வீட்டு மனை பட்டா மற்றும் ஏற்கனவே பட்டா வைத்திருப்பவர்களுக்கு அரசு வீடு கட்டும் திட்டத்தில் வீடு கட்டுவதற்கான ஆணை மற்றும் ஆவின் நிறுவனத்தின் மூலம் பால் பொருட்கள் விற்பனை மையம் அமைத்திட ரூ.50 ஆயிரம் மானியம் உட்பட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாதம் ஒரு முறை கலெக்டர் தலைமையில் மாவட்ட அளவிலான சிறப்பு குறைதீர் கூட்டமும், 15 நாட்களுக்கு ஒருமுறை கோட்டம் அளவில் ஆர்.டி.ஓக்கள் தலைமையிலும் குறைதீர் கூட்டம் நடத்தப்பட்டு மனுக்கள் பெறப்பட்டு உடனுக்குடன் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

மேலும் மாற்றுதிறனாளிகளுக்கான நலவாரியமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியின் 28 மாத கால சாதனையாக இதுவரையில் மாற்றுதிறானளிகள் துறையின் மூலம் திருவாரூர் மாவட்டத்தில் 15 ஆயிரத்து 781 பயனாளிகளுக்கு ரூ. 27 கோடியே 61 லட்சத்து 50 ஆயிரத்து 945 மதிப்பில் நலத்திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளது.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை