திருவாரூர், அக். 9: தமிழகத்தில் வழக்கமாக அக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் வடகிழக்கு பருவமழை காலம் துவங்கும். அதன் பின்னர் ஜனவரி, பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் பனி காலமாக இருப்பது வழக்கம். ஆனால், நடப்பாண்டில் கடந்த பிப்ரவரி மாதம் முதலே துவங்கிய வெயில் திருவாரூர் உட்பட மாநிலத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் 100 டிகிரிக்கு மேல் வெயில் சுட்டெரித்து வந்தது.
இந்நிலையில் தமிழகம் முழுவதும் பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ள நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் நேற்று பகல் 11 மணி வரையில் வழக்கம் போல் வெயில் அடித்த நிலையில், திடீரென மேகமூட்டம் ஏற்பட்டு , மாவட்டம் முழுவதும் 2 மணி நேரம் மிதமான மழை பெய்தது. இந்த மழை காரணமாக திருவாரூர் ரயில்வே கீழ்பாலம் உட்பட பல்வேறு தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது.