திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்நாள் கூட்டம்: 20 மாற்றுத்திறனாளிகளுக்கு கலெக்டர் காதொலி கருவி வழங்கினார்

திருவாரூர், ஆக.14: திருவாரூரில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் பொதுமக்களுக்கு ரூ.13 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சாரு வழங்கினார். திருவாரூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் திங்கட்கிழமைதோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் சாரு தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் பொது மக்கள் பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை, ஆக்கிரமிப்பு அகற்றுதல், கல்விக்கடன், வீட்டுமனைப்பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்த 360 மனுக்களை கலெக்டரிடம் அளித்தனர். பொது மக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் சாரு சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை வழங்கி குறித்த காலத்திற்குள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார். மேலும் வழக்கம் போல் தரைதளத்தில் மாற்றுதிறனாளிகளிடம் அவர்களது கோரிக்கை மனுக்களை பெற்றுகொண்டார்.

அதனைதொடர்ந்து, மாற்றுதிறனாளிகள் நலத்துறை சார்பில் 20 நபர்களுக்கு தலா ரூ.3 ஆயிரத்து 420 வீதம் காதொலி கருவி, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் முஸ்ஸிம் மகளிர் உதவும் சங்கத்தின் மூலம் 128 ஏழை முஸ்ஸிம் மகளிருக்கு ரூ. 12 லட்சத்து 55 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் என மொத்தம் ரூ.13 லட்சத்து 23 ஆயிரத்து 400 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சாரு வழங்கினார்.

மேலும் உலாமக்கள் நலவாரியத்தின் மூலம் 2 நபர்களுக்கும், கிறிஸ்தவ நலவாரியதத்தின் மூலம் 3 நபர்களுக்கும் நலவாரிய அட்டைகளை வழங்கினார். கூட்டத்தில் டி.ஆர்.ஒ சண்முகநாதன், சமூக பாதுகாப்பு திட்ட தனிதுணை ஆட்சியர் தையல் நாயகி, மாவட்ட வழங்கல் அலுவலர் தமிழ்மணி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் புவனா, பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் சங்கர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related posts

கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருக்காட்டுப்பள்ளியில் மாபெரும் பெட்டிஷன் மேளா

அரசு பள்ளி மாணவர்கள் தூய்மை திருவிழா விழிப்புணர்வு பேரணி