திருவள்ளூர்: திருவள்ளூர் மக்கள் குறைதீர் கூட்டத்தில் 366 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்திற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வருகை புரிந்த பொதுமக்கள், தங்களது தனிப்பட்ட குறைகளை நிவர்த்தி செய்வது தொடர்பாகவும், பொது பிரச்சனைகள் தொடர்பாக உதவிகள் வேண்டியும் மனுக்களை கலெக்டரிடம் வழங்கினர். இதில் மொத்தம் 366 மனுக்கள் பெறப்பட்டன.
இம்மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு தகுதியுள்ள பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிட சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் அறிவுறுத்தினார். மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு, உரிய நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இதில், மாவட்ட வழங்கல் அலுவலர் ஹஸ்ரத் பேகம், தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) மதுசூதனன், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் செல்வராணி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சீனிவாசன், முடநீக்கு வல்லுநர் ப்ரீத்தா மற்றும் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.