திருமணம் நிச்சயமான வாலிபர் தற்கொலை: செய்யாறு அருகே சோகம்

செய்யாறு, டிச.19: செய்யாறு அருகே திருமணம் நிச்சயித்த சில தினங்களில் தனியார் நிறுவன ஊழியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த வெம்பாக்கம் தாலுகா வடமாவந்தல் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் விஜய்(26). டிப்ளாமோ பட்டதாரியான இவர் கடந்த 8 ஆண்டுகளாக செய்யாறு- மாங்கால் கூட்ரோட்டில் உள்ள சிப்காட் தனியார் ஷூ கம்பெனியில் வேலை செய்து வந்தார். இவரை கடந்த 3 ஆண்டுகளாக திருமணம் செய்து கொள்ளும்படி பெற்றோர் கூறியுள்ளனர். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பெற்றோரின் வற்புறுத்தல் காரணமாக திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளார். இதையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன் அவரது கிராமத்திற்கு அருகே உள்ள பகுதியில் இருந்து ஒரு பெண்ணை அவரது குடும்பத்தினர் நிச்சயம் செய்தனர். அவருக்கு அடுத்த மாதம் திருமணம் நடக்கவிருந்தது. ஆனால், அதன் பின்னர் விஜய் மன உளைச்சலில் இருந்தாராம். இந்நிலையில் நேற்று முன்தினம் காலை நீண்ட நேரமாகியும் அவர் அறையில் இருந்து வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த பெற்றோர் சென்று பார்க்கும் போது அறையில் உள்ள மின்விசிறியில் சேலையில் தூக்கிட்டு தொங்கிய நிலையில் கிடந்தார்.

இதை கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் அவரை மீட்டு வெம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் விஜய் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து ராஜேந்திரன் தூசி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

Related posts

அலங்காநல்லூர் அருகே மண் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி பலி

சமயநல்லூர் அருகே சரக்கு வேன் மோதி வாலிபர் பலி

விபத்தின்றி பணியாற்றிய டிரைவருக்கு தங்க பதக்கம்