புழல்: திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி கடத்தப்பட்ட சிறுமியை போலீசார் மீட்டனர். சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சென்னை செங்குன்றம் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில், 16 வயது சிறுமியை காணவில்லை என அவரது பெற்றோர்கள் கடந்த 9ம் தேதி செங்குன்றம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். இந்தப் புகாரின் அடிப்படையில், செங்குன்றம் போலீசார்வழக்குப்பதிவு செய்து, தனிப்படை அமைத்து, சிசிடிவி காட்சிகள் அடிப்படையில், காணாமல் போன சிறுமியை தீவிரமாக தேடி வந்தனர். சிறுமியை ஒரு வாலிபர் அழைத்துச் சென்றது தெரியவந்தது. இந்நிலையில், நேற்று காலை செங்குன்றம் பேருந்து நிலையத்தில் ஒரு வாலிபர் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டு இருந்தார். அதை பார்த்த போலீசார் அவரை பிடித்து விசாரித்தனர். அதில், அவர் தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் கொல்லம்பட்டி பாளையம் புதூர் பகுதியைச் சேர்ந்த முரளி என்பதும், அச்சிறுமியை கடத்தி சென்றதும் தெரியவந்தது. மேலும் விசாரணையில், கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு சிறுமிக்கும், அந்த வாலிபருக்கும் செல்போனில் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து கடந்த 9ம் தேதி செங்குன்றம் வந்த முரளி சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி, அழைத்துச் சென்று திருமணம் செய்து, பாலியல் பலாத்காரம் செய்ததும் தெரியவந்தது. இதனையடுத்து முரளியை கைது செய்த செங்குன்றம் போலீசார், மாதவரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அவரை ஒப்படைத்தனர். பின்னர், அவரை மாதவரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்….