திருமங்கலம்: திருமங்கலம் அருகே மினிவேனில் கடத்திய 80 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியில் அதிகளவில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகருக்கு தகவல் வந்தது. இதனைதொடர்ந்து ரேஷன் அரிசி கடத்தலை கண்காணிக்கும்படி வருவாய்த்துறையினருக்கு அவர் உத்தரவிட்டார். நேற்று இரவு திருமங்கலம் ஆர்டிஓ. அபிநயா, தாசில்தார் சிவராம், வருவாய் ஆய்வாளர்கள் திருமங்கலம் டவுன் அருண்குமார், கொக்குளம் சுமன், மைக்குடி விஏஒ பாலமுருகன் அடங்கிய குழுவினர் திருமங்கலம்-மதுரை விமானநிலையம் ரோட்டில் வாகனசோதனையில் ஈடுபட்டனர். அப்போது திருமங்கலத்திலிருந்து விமானநிலையம் ரோடு வழியாக மதுரை நோக்கி வந்த மினிவேனை அவர்கள் நிறுத்தினார். அதிகாரிகளை கண்டவுடன் வேனை நிறுத்திவிட்டு டிரைவர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். இதனால் சந்தேகமடைந்த ஆர்டிஓ மற்றும் தாசில்தார் மினிவேனை சோதனை செய்த போது, அதில் 80 மூட்டைகளில் ரேஷன் அரிசி இருந்தது தெரிந்தது. மொத்த எடை 4 டன் ஆகும். இதனை அடுத்து ஆர்டிஒ, தாசில்தார் ஆகியோர் மினிவேனையும், ரேஷன் அரிசியையும் பறிமுதல் செய்தனர். மேலும் தப்பியோடிய வேன் டிரைவரை தேடி வருகின்றனர்….