திருமங்கலம், ஜூன் 11: திருமங்கலம் அருகே போலீசாரின் வாகன சோதனையில், மினிவேனில் பெட்ரோல், டீசல் கடத்தியவரை போலீசார் கைது செய்தனர். திருமங்கலம் – மதுரை ரிங்ரோட்டில் உள்ள கருவேலம்பட்டி விலக்கு பகுதியில், ஆஸ்டின்பட்டி எஸ்.ஐ சங்கர் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் இரவு வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மதுரையிலிருந்து திருமங்கலம் நோக்கி வந்த மினிவேனை நிறுத்தி போலீசார் சோதனை நடத்தினர்.
அந்த வேனில் 90 லிட்டர் பெட்ரோல் இரண்டு கேன்களிலும், 40 லிட்டர் டீசல் இரண்டு கேன்களிலும் இருந்தது. இது குறித்து டிரைவர் கள்ளிக்குடி உலகாணியை சேர்ந்த முருகனிடம்(45) கேட்டபோது முன்னுக்கு பின் முரணமாக பதில் கூறினார். மேலும், பாதுகாப்பு உபகரணங்கள் எதுவும் இல்லாமல் வாகனத்தில் எளிதில் தீப்பற்றக்கூடிய பெட்ரோல், டீசலை கொண்டு சென்றுள்ளார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் முருகனை கைது செய்து, பெட்ரோல், டீசலை பறிமுதல் செய்தனர்.