திருமங்கலம் அருகே தண்டவாளத்தில் இரும்புத்துண்டு குருவாயூர் எக்ஸ்பிரசை கவிழ்க்க சதித்திட்டமா? ரயில்வே போலீசார் விசாரணை

திருமங்கலம்: திருமங்கலம் அருகே குருவாயூர் சென்ற எக்ஸ்பிரஸ் ரயில், தண்டவாளத்தில் கிடந்த இரும்புத்துண்டு மீது மோதியதில் ரயில் பெட்டியின் படிக்கட்டு சேதமடைந்தது. சென்னையிலிருந்து மதுரை வழியாக குருவாயூர் எக்ஸ்பிரஸ் நேற்று மாலை சென்றது. மதுரை மாவட்டம், திருமங்கலத்தை அடுத்த கள்ளிக்குடி ரயில்வே ஸ்டேசன் அருகே மாலை 5.45 மணியளவில் ரயில் சென்றபோது திடீரென சத்தம் அதிகமாக கேட்கவே, டிரைவர் ரயிலை நிறுத்தினார். இதனை தொடர்ந்து ரயிலில் இருந்து டிரைவர் மற்றும் பயணிகள் இறங்கி பார்த்தபோது தண்டவாளத்தின் நடுவே இரும்புத்துண்டுகள் உடைந்து  சுக்குநூறாக கிடந்தது. இரும்புத்துண்டு மீது வேகமாக வந்த ரயில் ஏறி இறங்கியதால் பெட்டி ஒன்றின் படிக்கட்டு உடைந்திருந்தது. இதே போல் ரயில் கடந்து சென்ற பகுதியில் ஸ்லீப்பர் கட்டைகளில் சில உடைந்து காணப்பட்டன. இதனால் அதிர்ச்சியடைந்த டிரைவர் இதுகுறித்து கள்ளிக்குடி ரயில்வே ஸ்டேசனுக்கு தகவல் கொடுத்தார். அதன்பின்பு ரயில் மெதுவாக இயக்கப்பட்டு கள்ளிக்குடி ரயில்வே ஸ்டேசனில் நிறுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து சேதமடைந்த படிக்கட்டு அகற்றப்பட்டு, குருவாயூர் எக்ஸ்பிரஸ் அரை மணி நேரம் தாமதமாக கள்ளிக்குடியிலிருந்து விருதுநகர் புறப்பட்டு சென்றது. இது குறித்து விருதுநகர் ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தண்டவாளத்தில் இரும்புத்துண்டு கிடந்தது ரயிலை கவிழ்க்க சதியா அல்லது ரயில்வே ஊழியர்கள் தண்டவாளத்தில் பணி செய்யும்போது விட்டு சென்ற இரும்புத்துண்டா என போலீசார் விசாரிக்கின்றனர். …

Related posts

குளச்சலில் மீனவர்கள் வலையில் சிக்கிய நெத்திலி மீன்கள்: விலை வீழ்ச்சியால் கவலை

இந்திய விமானப்படை தினத்தை முன்னிட்டு மெரினாவில் நாளை விமான சாகசம்: போக்குவரத்தில் மாற்றம்: 6500 போலீசார் பாதுகாப்பு

எங்களை என்றும் இளமையாக இயக்குவது திமுக: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு