திருமங்கலம், ஜூலை 23: திருமங்கலம் நகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு, நேற்று நடைபெற்ற கண் சிகிச்சை முகாமினை நகர்மன்ற தலைவர் ரம்யா முத்துக்குமார் துவக் கிவைத்தார். திருமங்கலம் நகராட்சியில் தூய்மை பணியாளர்கள், ஒப்பந்த தூய்மை பணியாளர்கள், கொசுப்புழு ஒழிப்பு பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் என 210 பேர் உள்ளனர். இவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் நகராட்சி சார்பில் கண் சிகிச்சை முகாம் நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு திருமங்கலம் நகர் மன்ற அலுவலகத்தில் நடைபெற்ற கண் சிகிச்சை முகாமினை, நகராட்சி தலைவர் ரம்யா முத்துக்குமார் துவக்கிவைத்தார்.
நகராட்சி துணைத்தலைவர் ஆதவன் அதியமான் முன்னிலை வகித்தார். மதுரை தனியார் கண்மருத்துவமனை சார்பில், மருத்துவக்குழுவினர் தூய்மை பணியாளர்களின் கண்களை பரிசோதனை செய்தனர். இதில் நகராட்சி ஆணையாளர் அசோக்குமார், சுகாதார அலுவலர் சண்முகவேல், சுகாதார ஆய்வாளர் சிக்கந்தர், கவுன்சிலர்கள் ஜஸ்டின் திரவியம், திருக்குமார், சின்னசாமி, வீரக்குமார், ரவி, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த முகாமில் பார்வை குறைபாடு, கண்புரை உள்ளிட்டவை கண்டறியப்பட்டது. சுமார் 35 தூய்மை பணியாளர்களுக்கு, உயர் சிகிச்சை பெற அறிவுறுத்தப்பட்டது.