திருப்போரூர்: திருப்போரூர் ஒன்றியத்தில் அடங்கிய 50 ஊராட்சிகளில் மத்திய அரசின் நிதி உதவியுடன் நடத்தப்படும் மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தை மேற்பார்வையிடும் பணித்தளப் பொறுப்பாளர்கள் பலர், கடந்த ஆட்சியின்போது ஆளுங்கட்சி ஆதரவாளர்களாக நியமிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.இதையடுத்து திருப்போரூர் ஒன்றியத்தின் 50 ஊராட்சிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு சரியாக பணிபுரியாத 27 ஊராட்சிகளின் பணித்தள பொறுப்பாளர்கள் நீக்கப்பட்டு புதியவர்கள் நியமிக்கப்பட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மடையத்தூர், காரணை உள்பட 10க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் வேலை செய்யும் பொதுமக்கள் தங்கள் வேலையை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.மேலும் வேலை நீக்கம் செய்யப்பட்ட பணித்தள பொறுப்பாளர்களுடன் திருப்போரூர் ஒன்றிய அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டனர். அவர்களிடம், வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கட்ராமன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, பணித்தளப் பொறுப்பாளர் வேலை செய்பவர்களும் 100 நாட்கள் மட்டுமே வேலை செய்ய முடியும். அவர்களை மாற்றம் செய்வது வழக்கமான நடைமுறை என கூறினார். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். …