திருப்பூர்: திருப்பூரில் சூட்கேஸ் பேகில் வைத்து பெண் சடலம் வீசப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சாலையில் இருக்கக்கூடிய புதுநகர் என்ற பகுதியில் சாக்கடை கால்வாயில் சூட்கேஸில் அடைக்கப்பட்டபடி 25 வயது மதிக்கத்தக்க பெண்ணின் சடலம் இருந்துள்ளது. இன்று காலை அப்பகுதி பொதுமக்கள் அந்த வழியாக சென்ற போது கால்வாயில் சூட்கேஸ் இருந்துள்ளதை பார்த்துள்ளனர். அருகில் சென்று பார்த்தபோது சூட்கேஸில் ரத்த கரை இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனால் சந்தேகமடைந்த அவர்கள், காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளனர்.உடனடியாக ஊரக காவல்துறையினரும், வீரபாண்டி காவல்துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சூட்கேஸை சோதனை செய்ததில், சூட்கேஸில் அடைக்கப்பட்டபடி சுமார் 25 வயது மதிக்கத்தக்க பெண்ணின் சடலம் இருப்பதை கண்டனர். தொடர்ந்து சடலத்தை கைப்பற்றிய போலீசார், திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு உடற்கூராய்விற்காக அனுப்பி வைத்தனர். அப்பெண் நைட்டி அணிந்துள்ளார். பெண்ணின் சடலம் சூட்கேசில் எப்படி வந்தது?. சாக்கடையில் வீசி சென்றவர்கள் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இரவு நேரங்களில் அப்பகுதியில் ஏதேனும் வாகன நடமாட்டம் இருந்ததா? என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது. தற்போது வரை சூட்கேஸில் அடைக்கப்பட்டிருந்த பெண்ணின் விவரம் பற்றி தகவல் கிடைக்கப்பெறவில்லை. காவல்துறையினரின் விசாரணைக்கு பிறகே முழு விவரங்கள் வெளிவரும்….