திருப்பரங்குன்றம், ஏப். 11: மதுரை மாநகராட்சி மேற்கு மண்டல குழுவின் 8வது கூட்டம் நேற்று திருப்பரங்குன்றத்தில் உள்ள மண்டல அலுவலகத்தில் நடைபெற்றது. மண்டல குழு தலைவர் சுவிதா விமல் தலைமை வகிக்க, உதவி ஆணையர் சையது முஸ்தபா கமால் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கவுன்சிலர்கள் ரவிச்சந்திரன், உசிலை சிவா, இந்திரா காந்தி, விஜயா, ஸ்வேதா, சத்யன் உள்ளிட்ட 21 பேர் கலந்து கொண்டு தங்கள் பகுதி வளர்ச்சி பணிகள், எடுக்க வேண்டிய நடவடிக்கைகள், பொதுமக்களின் அடிப்படை பிரச்னைகள் குறித்து கோரிக்கை வைத்தனர். பின்னர் கவுன்சிலர் உசிலை சிவா மாநகராட்சி நிர்வாகம், தமிழக முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தார்.
தொடர்ந்து அனைத்து கவுன்சிலர்கள் சார்பில் பொதுமக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற மேற்கு மண்டலத்திற்குட்பட்ட வார்டுகளுக்கு அதிக நிதி ஒதுக்க வேண்டும் என மாநகராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்தனர். இதில் மாநகராட்சி அதிகாரிகள், உதவி பொறியாளர்கள், சுகாதார துறை அலுவலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.