திருப்பரங்குன்றம், ஜன.28: முருகப்பெருமானின் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கடந்த அதிமுக ஆட்சியில் அறங்காவலர் குழு நியமிக்கப்படாத நிலையில், தற்போது புதிதாக அறங்காவலர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதனால் விரைவில் இக்கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இந்நிலையில் கடந்த 3ம் தேதி இந்து சமய அறநிலையத் துறை சார்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பில் ஆன்மீக செம்மல் சண்முகசுந்தரம், மணிச்செல்வன், சத்யபிரியா, பொம்மதேவன், ராமையா ஆகியோர் அறங்காவலர்களாக நியமனம் செய்யப்பட்டனர்.
புதிதாக தேர்வு செய்யப்பட்ட அறங்காவலர்கள் நேற்று காலை கோயில் வள்ளி தேவசேனா திருமண மண்டபத்தில் மண்டல இணை ஆணையர் செல்லதுரை, கோயில் துணை ஆணையர் சுரேஷ் ஆகியோர் முன்னிலையில் பதவியேற்று கொண்டனர். இதில் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் வளர்மதி புதிய அறங்காவலர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
தொடர்ந்து அறங்காவலர் குழு தலைவருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்த வாக்கெடுப்பில் பா.சத்தியபிரியா அறங்காவலர் குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு அறங்காவலர்கள் மற்றும் கோயில் அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர். இந்த விழாவில் தெற்கு மாவட்ட திமுக துணை செயலாளர் பாலாஜி, மாமன்ற உறுப்பினர் உசிலை சிவா, தமிழ்நாடு தொழிலாளர் நலவாரிய உறுப்பினர் பிஎஸ்என்எல் செல்வம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.