காரைக்கால், மே 29: காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு அடுத்த சேத்தூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற மகா மாரியம்மன் ஆலயத்தின் தீமிதி திருவிழா பூச்சொரிதல் உற்சவத்துடன் துவங்கியது. பூச்சொரிதல் நிகழ்ச்சியை முன்னிட்டு மகா மாரியம்மன் ஆலயத்தில் இருந்து கரகம், மங்கள வாத்தியங்கள் முழங்க 1000க்கும் மேற்பட்ட பெண்கள் பலவண்ண பூக்கள் கொண்ட தட்டுக்களுடன் முக்கிய வீதிகள் வழியாக வீதியுலாவாக வந்து மீண்டும் ஆலயம் வந்தடைந்தனர்.
பின்னர் மகா மாரியம்மனுக்கு பெண்கள் ஊர்வலமாக எடுத்து வந்த வண்ண மலர்களால் அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்ட மலர்கள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. விழாவில் கிராம பஞ்சாயத்தார்,அறங்காவலர் குழு நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
மகா மாரியம்மன் ஆலய தீமிதி திருவிழா வரும் ஜூன் 3ம் தேதி நடைபெற உள்ளது.