திருத்தணி, ஜூலை 14: திருத்தணி சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. சுமார் 1 மணி நேரம் பெய்த மழைக்கு நகரின் தாழ்வான பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ரயில் நிலையம், மார்க்கெட் பகுதியில் உள்ள ம.பொ.சி சாலையில் முழங்கால் அளவுக்கு மழை நீரில் கழிவுநீர் கலந்து குளம் போல் தேங்கி நின்றதால், அவ்வழியாக போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது.
வாகன ஓட்டிகள் காந்தி ரோடு வழியாக சுற்றி செல்லும் நிலை ஏற்பட்டது. இதனால் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனைதொடர்ந்து, நகர மன்ற தலைவர் சரஸ்வதி பூபதி உத்தரவின் பேரில் நகராட்சி ஆணையர் அருள் மேற்பார்வையில் ஊழியர்கள் ம.பொ.சி சாலையில் தேங்கிய மழை நீரை பொக்கலன் இயந்திரம் மூலம் நேற்று காலை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து, அவ்வழியில் போக்குவரத்து சகஜ நிலைக்கு திரும்பியது.