திருத்தணி அருகே பரபரப்பு: பாறை புறம்போக்கு நிலத்தில் கட்டப்பட்ட வீடுகள் இடிப்பு

திருத்தணி: திருத்தணி அருகே அரசுக்கு சொந்தமான பாறை புறம்போக்கு நிலத்தில் கட்டப்பட்டிருந்த வீடுகளை அதிகாரிகள் இடித்து அப்புறப்படுத்தினர். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த அமிர்தாபுரம் கிராமத்தில் பல ஏக்கரில் அரசுக்கு சொந்தமான பாறை புறம்போக்கு நிலம் உள்ளது. இந்த நிலத்தை சிலர் ஆக்கிரமித்துவைத்துள்ளதுடன் பலர் வீடுகள் கட்டிவருவதாக திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அல்பி ஜான் வர்கீசுக்கு ஏராளமான புகார்கள் சென்றது. இதையடுத்து அவர் சம்பவ இடத்தை ஆய்வுசெய்யும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதன் அடிப்படையில், திருத்தணி வட்டாட்சியர் ஜெயராணி தலைமையில், திருத்தணி வருவாய் ஆய்வாளர் உதயகுமார், கிராம நிர்வாக அலுவலர்கள் அமிர்தா, ரகுவரன், துரைக்கண்ணு, சங்கரவேல், சுரேஷ், தங்கதுரை மற்றும் நிர்மல் குமார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அங்கு ஆய்வு செய்தபோது அரசுக்கு சொந்தமான பாறை புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து வீடுகள் கட்டப்பட்டிருப்பது தெரிந்தது. இதையடுத்து அங்கு கட்டப்பட்டிருந்த வீடுகளை ஜேசிபி இயந்திரம் மூலம் அப்புறப்படுத்தினர். பொதுமக்கள் பிடியில் இருந்து சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பு நிலத்தை அதிகாரிகள் மீட்டனர். அதிகாரிகள் கூறும்போது, ‘’அரசுக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமிப்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். மீட்கப்பட்ட நிலத்தில் இது அரசுக்கு சொந்தமான இடம் என்று பெயர்ப்பலகை வைக்கப்படும். இதை மீறி வீடு கட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றனர்….

Related posts

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் அரிவாளால் வெட்டி படுகொலை!

தமிழகத்தில் அரசு உதவிபெறும் பள்ளிகளில் காலை உணவு விரிவாக்க திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் 15ல் தொடங்கி வைக்கிறார்: திருவள்ளூர் மாவட்டத்தில் பிரமாண்ட விழாவுக்கு ஏற்பாடு

ஒன்றிய அரசின் குற்றவியல் சட்டத்தை எதிர்த்து; திமுக சார்பில் நாளை உண்ணாவிரத போராட்டம்: சட்டத்துறை செயலர் என்.ஆர். இளங்கோ அறிவிப்பு