திருத்தணியில் நள்ளிரவு பயங்கரம் மனைவி கொடூர கொலை: கணவன் கைது

திருத்தணி, ஜூலை 2: வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த மனைவியை நள்ளிரவில் வெட்டிக்கொலை செய்த கணவன் கைது செய்யப்பட்டார். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி நரசிம்மசுவாமி கோயில் தெருவை சேர்ந்தவர் விநாயகம்(42). இவரின் மனைவி கிரிஜா(34). கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு தேவா(16) என்ற மகன் உள்ளார். தம்பதி கடந்த 14 வருடங்களாக பெங்களூரூவில் கூலி வேலை செய்தனர். இந்நிலையில், கடந்த 15 நாட்களுக்கு முன்புதான் தம்பதியினர் திருத்தணியில் உள்ள வாடகை வீட்டில் குடியேறினர். இதனை தொடர்ந்து தங்கள் மகனை அரக்கோணத்தில் உள்ள தனியார் பள்ளியில் 8ம் வகுப்பு படிக்க சேர்த்தனர்.

இந்நிலையில், திருத்தணியில் இருந்து விநாயகம் கூலி வேலைக்கும், கிரிஜா வீட்டு வேலைகளுக்கும் சென்றுவந்துள்ளனர். இதனிடையே தம்பதி இடையே அடிக்கடி வாக்குவாதம், தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்றுமுன்தினம் இரவு வழக்கம்போல் இருவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டதாகவும், பின்னர் தூங்க சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இதன்பிறகு நள்ளிரவு 1 மணி அளவில் எழுந்த விநாயகம் ஆத்திரம் குறையாத நிலையில், வீட்டில் இருந்த கத்தியை எடுத்து வந்து அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த மனைவியின் தலை, கை, கால்கள், மார்பு பகுதிகளில் சரமாரியாக வெட்டியுள்ளார். திடீரென கிரிஜாவின் கதறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்தபோது கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்ததால் திறக்க முடிவில்லை.

உடனே அங்கிருந்தவர்கள் திருத்தணி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பொதுமக்கள் முன்னிலையில் கதவை உடைத்து கிரிஜாவின் சடலத்தை மீட்டனர். பின்னர் அங்கு ரத்தக்கறை படிந்திருந்த கத்தியுடன் நின்றிருந்த விநாயகத்தை கைது செய்தனர். இதன்பிறகு கிரிஜாவின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுபற்றி வழக்குபதிவு செய்துள்ள போலீசார், குடும்ப பிரச்னையில்தான் மனைவி கொலை செய்தாரா, வேறு ஏதாவது பிரச்னையா என பல கோணங்களில் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவத்தால் திருத்தணி பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை