திருத்தணி: திருத்தணி நகராட்சிக்கு உட்பட்ட அனுமந்தாபுரம் பகுதியில் 50 அடி ஆழமுள்ள தரைக்கிணற்றில் தண்ணீர் நிரம்பி உள்ளன. இந்த கிணற்றில் இரு நாட்களுக்கு முன்பு பசு மாடு ஒன்று தவறிவிழுந்து விட்டது. இந்நிலையில் நேற்று அவ்வழியாக சென்றவர்கள் கிணற்றில் மாடு கத்தும் சத்தம் கேட்டதை அறிந்து கிணற்றின் அருகே சென்று பார்த்தனர். அப்போது, பசு மாடு ஒன்று தண்ணீரில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது. இதுகுறித்து உடனடியாக அவர்கள் திருத்தணி தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, அரைமணி நேரத்திற்கு மேலாக போராடி பசு மாட்டை உயிருடன் மீட்டனர். மேலும் விசாரணையில் திருத்தணி முருகன் கோயிலில் ஊழியராக பணிபுரிந்து வரும் முனியன் என்பவருக்கு சொந்தமான பசுமாடு என்றும், இரண்டு நாட்களாக மாட்டை தேடி வந்ததும் தெரிய வந்தது. இதனை தொடர்ந்து தீயணைப்புத் துறையினர் முனியனிடம் பசுமாட்டை ஒப்படைத்தனர்.