Sunday, September 8, 2024
Home » திருடிய ஆடுகளை சந்தையில் விற்க முயன்ற 3 வாலிபர்களுக்கு தர்ம அடி ஒடுகத்தூரில் பரபரப்பு குடியாத்தத்தில் கொட்டகைக்குள் புகுந்து

திருடிய ஆடுகளை சந்தையில் விற்க முயன்ற 3 வாலிபர்களுக்கு தர்ம அடி ஒடுகத்தூரில் பரபரப்பு குடியாத்தத்தில் கொட்டகைக்குள் புகுந்து

by Karthik Yash

ஒடுகத்தூர், நவ.4: குடியாத்தத்தில் கொட்டகைக்குள் புகுந்து திருடிய 2 ஆடுகளை நேற்று ஒடுகத்தூர் சந்தையில் விற்க முயன்ற 3 வாலிபர்களுக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் பகுதியில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமையன்று ஆட்டுச்சந்தை நடக்கிறது. இங்கு வெளிமாநிலம் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் ஆடுகளை கொண்டுவந்து விற்பதும், வாங்கிச் செல்வதும் வழக்கம். இதனால் வாரந்தோறும் ₹25 லட்சம் வரை வியாபாரம் நடக்கிறது. இதேபோல், நேற்று காலையும் வழக்கம்போல் ஆட்டுச்சந்தை கூடியது. எனவே, பல்வேறு பகுதிகளில் இருந்து வேன், ஆட்டோ, டூவீலர் உட்பட வாகனங்களில் ஏராளமானோர் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

அதேபோல், 3 வாலிபர்கள் பைக்கில் 2 ஆடுகளுடன் வந்தனர். பின்னர், அவர்கள் அங்கிருந்த வியாபாரிகளை அணுகி, `இந்த 2 ஆடுகளையும் நாங்கள் வளர்த்து வருகிறோம். அவசர பணத்தேவைக்காக இவற்றை விற்க வந்துள்ளோம்’ எனக் கூறியுள்ளனர். மேலும், 2 ஆடுகளையும் ₹17 ஆயிரத்திற்கு கொடுக்க முடிவு செய்து பேரம் பேசினர். அப்போது, அங்கு வந்த ஒருவர், இந்த 2 ஆடுகளும் எனக்கு சொந்தமானவை, இவற்றை திருடிவந்து விற்கின்றனர்’ என கத்தி கூச்சலிட்டார். உடனே சுதாரித்துக் கொண்ட வியாபாரிகள் அந்த 3 வாலிபர்களை கையும், களவுமாக பிடித்து அங்குள்ள மரத்தில் கட்டி வைத்து தர்மஅடி கொடுத்தனர். பின்னர், இதுகுறித்து வேப்பங்குப்பம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் நாகராஜன் மற்றும் போலீசார் விரைந்து வந்து ஆடுகள் திருடியதாக கூறப்படும் 3 வாலிபர்களை பிடித்து விசாரித்தனர்.

அதில், அவர்கள் குடியாத்தம் செதுக்கரை ஜீவா நகரை சேர்ந்த அஜீத்(19), போஸ்(20), சந்துரு(19) என்பதும், இவர்கள் சேத்துவண்டை பகுதியை சேர்ந்த ரஞ்சித் என்பவரது கொட்டகையில் நேற்று முன்தினம் இரவோடு இரவாக 2 ஆடுகளை திருடி பைக்கில் கொண்டு வந்து நேற்று ஒடுகத்தூர் சந்தையில் விற்க முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து, ஆடுகளை பறிமுதல் செய்த போலீசார், 3 வாலிபர்களையும் குடியாத்தம் போலீசில் ஒப்படைத்தனர்.
தொடர்ந்து, குடியாத்தம் போலீசார் வழக்குப் பதிவு செய்து 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருடி வந்த ஆடுகளை சந்தையில் விற்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.

You may also like

Leave a Comment

2 × 5 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi