திருச்சி, ஜூன் 9: திருச்சி மாவட்ட கோர்ட்டுகளில் நேற்று நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1514 வழக்குகளில் தீர்வுத் தொகையாக ₹153154926 பெற்றுத்தரப்பட்டது. புதுடெல்லி தேசிய சட்டபணிகள் ஆணைக்குழு (NALSAY) மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு (TNSLSA) -ன் உத்தரவு மற்றும் வழிகாட்டுதலின்படி திருச்சி மாவட்டத்தில் நேற்று தேசிய மக்கள் நீதிமன்றம் நடந்தது. தேசிய மக்கள் நீதிமன்றத்தை திருச்சி மாவட்ட முதன்மை நீதிபதியும், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவருமாகிய மணிமொழி துவக்கி வைத்தார். இதில் திருச்சி மாவட்ட கோர்ட் வளாகத்தில் 11 மக்கள் நீதிமன்ற அமர்வுகளும், மணப்பாறை. துறையூர் முசிறி, லால்குடி ஆகிய தாலுக்கா பகுதிகளில் உள்ள கோட்டுகளில் தலா 2 அமர்வுகளும், ரங்கம் மற்றும் தொட்டியம் கோர்ட்டில் தலா ஒரு மக்கள் நீதிமன்ற அமர்வுகளும் என மொத்தம் 21 அமர்வுகளில் பல்வேறு வகையான வழக்குகள் விசாரிக்கப்பட்டு சமரசமாக தீர்வு பெறப்பட்டது.
ஒவ்வொரு மக்கள் நீதிமன்ற அமர்விலும் ஒரு பணியில் உள்ள நீதிபதி தலைவராக செயல்பட்டு வழக்குகளில் சமரச முறையில் தீர்வு பெறப்பட்டது. இதில கோர்ட்டில் நீண்ட காலமாக நிலுவையில் இருந்த சமரசம் செய்யக் கூடிய குற்றவியல் வழக்குகள், காசோலை மோசடி வழக்குகள், மோட்டார் வாகன இழப்பீடு கோரும் வழக்குகள், தொழிலாளர் நிவாரண வழக்குகள், குடும்பநல வழக்குகள், நில ஆர்ஜிதம் தொடர்பான வழக்குகள், தொழிலாளர் இழப்பீட்டு வழக்குகள் , உரிமையியல் சம்மந்தமான வழக்குகள் (Civil Cases), வங்கி வார கடன் தொடர்பான வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இதில் 10 615 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. அவற்றில் 1514 வழக்குகளில் தீர்வு பெறப்பட்டது. இதில் ₹153154926 தீர்வாக பெற்றுத்தரப்பட்டது.
இந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் மாவட்ட நீதிபதிகள், சப்-கோர்ட் நீதிபதிகள், உரிமையியல் கோர்ட் நீதிபதிகள் மற்றும் மாஜிஸ்திரேட் கோரி ட் நீதிபதிகள், வக்கீல்கள், அனைத்து சங்க நிர்வாகிகள், காப்பீட்டு நிறுவன அதிகாரிகள் , வங்கி அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள் மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர். தேசிய மக்கள் நீதிமன்றத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் திருச்சி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளர் (பொ) மீனாசந்திரா செய்திருந்தார்.