திருச்சி, ஜூன்15: திருச்சி, கொட்டபட்டு ஆவின் பால்பண்ணையை தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் நேற்று நேரில் ஆய்வு செய்தார். பின்னர் அங்கு நடைபெற்ற விழாவில் 776 பயனாளிகளுக்கு ரூ.4.24 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். முன்னதாக, வளாகத்தில் புதிதாக ரூ.5.30 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் ஐஸ்கீரீம் தயாரிக்கும் ஆலை கட்டட கட்டுமான பணிகளையும், பால் பதப்படுத்துதல் தயாரிப்பு கூடத்தையும் அமைச்சர் மனோ தங்கராஜ் நேரில் ஆய்வு செய்தார்.
பின்னர் திருச்சி, பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களைச் சார்ந்த 477 பேருக்கு ரூ.3.44 கோடியில் கறவை மாட்டு கடன்களும், 173 பேருக்கு ரூ.24.91 லட்சத்தில் கறவை மாடு பராமரிப்பு கடன்களும், 75 பேருக்கு ரூ.37.50 லட்சத்தில் பால் பகுப்பாய்வு கருவிகளும், 9 பால் உற்பத்தியாளர்களுக்கு ரூ.6,000 ஊக்கத்தொகை, ரூ.63,000 மதிப்பீட்டில் 3 தாட்கோ சங்கங்களுக்கு நலத்திட்ட உதவிகள், 15 பேருக்கு ரூ.2,950 மதிப்பீட்டில் விதை விநியோகம், 9 பேருக்கு ரூ.450 மதிப்பில் தாது உப்பு கலவைகளும், 6 பேருக்கு பேரறிஞர் அண்ணா நல நிதித்திட்டத்தின்கீழ் ரூ.16.85 லட்சத்தில் நலத்திட்ட உதவிகளும் என மொத்தம் 776 பயனாளிகளுக்கு ரூ.4.24 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் மனோ தங்கராஜ் வழங்கினார்.
இந்நிகழ்வுகளில் திருச்சி எம்பி திருநாவுக்கரசர், கலெக்டர் பிரதீப்குமார், பால் உற்பத்தி மற்றும் பால்பண்ணை மேம்பாட்டுத்துறை நிர்வாக இயக்குநர் வினீத், மேயர் அன்பழகன், எம்எல்ஏ தியாகராஜன், ஆவின் பொது மேலாளர் (டிஆர்ஓ) பெருமாள், மாவட்ட ஊராட்சித் தலைவர் ராஜேந்திரன் உள்பட பலர் பங்கேற்றனர்.