திருச்சி, அக். 20: ஜாக்டோ ஜியோ அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் குழு கூட்டம் மற்றும் உயர்மட்ட குழு கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு பின்னர் ஒருங்கிணைப்பாளர்கள் இளங்கோ, குமார், சங்கர் கூறுகையில், அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் கடந்த இரு ஆண்டுகளாக அரசு காலம்தாழ்த்தி வருகிறது. குறிப்பாக புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், சரண்டர் விடுப்பை ஒப்படைக்க வேண்டும், ஊக்க தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்பன முக்கிய கோரிக்கைகளாகும்.
இவற்றை வலியுறுத்தி கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பாகவே சட்டமன்ற முற்றுகை போராட்டத்தை அறிவித்தோம். ஆனால் அரசு எங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய தீர்வு காணப்படும் என தெரிவித்தால் போராட்டம் நடத்தவில்லை. எனவே அதற்கு உரிய தீர்வு கோரி கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது அதன்படி, நவம்பர் 1ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். நவம்பர் 25ம்தேதி மாவட்ட தலைநகரங்களில் மறியல் போராட்டம் நடத்தப்படும். டிசம்பர் 28ம்தேதி சென்னையில் சட்டமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட உள்ளோம் என்றனர்.