Sunday, September 29, 2024
Home » திருக்கழுக்குன்றம் ஊராட்சி ஒன்றியத்தில் தொடக்க பள்ளிகளில் ‘எண்ணும் எழுத்தும்’ திட்டத்தை கலெக்டர் நேரில் ஆய்வு

திருக்கழுக்குன்றம் ஊராட்சி ஒன்றியத்தில் தொடக்க பள்ளிகளில் ‘எண்ணும் எழுத்தும்’ திட்டத்தை கலெக்டர் நேரில் ஆய்வு

by Karthik Yash

செங்கல்பட்டு, செப்.8: திருக்கழுக்குன்றம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளில் எண்ணும் எழுத்தும்’ திட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் ஆய்வு செய்தார். செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மலாலிநத்தம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மற்றும் சோகன்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆரம்ப கல்விக்கான கற்றல் செயல்பாட்டினை ஊக்குவிக்கும் விதமாக ‘எண்ணும் எழுத்தும்’ திட்டத்தின் கீழ் கற்பிக்கப்பட்டு வரும் பாடங்களை மாவட்ட கலெக்டர் ராகுல்நாத், நேரில் பார்வையிட்டு, மாணவர்களிடம் கேட்டறிந்து ஆய்வு மேற்கொண்டார்.

தமிழக அரசால் உருவாக்கப்பட்ட ‘எண்ணும் எழுத்தும்’ திட்டமானது ஆரம்ப கல்விக்கான ஒரு புதுமையான முன்னோடி திட்டமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டம், குழந்தைகள் தங்களின் கற்றல் செயல்பாட்டுடன் நிறுத்திவிடாமல், நடனம், பேச்சு, பாட்டு ஆகியவற்றில் ஈடுபாட்டோடு பங்கேற்கும் விதமாக இக்கல்வி குழந்தைகளுக்கு ஆர்வத்துடன் கல்வி பயில ஏதுவாக அமைகிறது. வெறும் கேட்டுக்கொண்டு மட்டும் படிக்கும் படிப்பை விட அனுபவரீதியான கற்றலையும், சுய கண்டறிதல்களையும், சக மாணவர்களுடன் ஒருங்கிணைந்து கற்பதையும் இந்தத் திட்டம் ஊக்குவிக்கிறது.

குழந்தைகள் தங்களின் கற்றல் நிலைக்கு ஏற்றவாறு ஆரம்ப கல்வி பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு ‘அரும்பு’, ‘மொட்டு’, ‘மலர்’ என வகுப்புகள் நடத்தப்பட்டு வருவதை மாவட்ட கலெக்டர் ஆய்வு மேற்கொண்டு, 1 மற்றும் 2ம் வகுப்பு மாணவ, மாணவிகளிடம் அரும்பு என்ற பாடத்திட்டத்தின் கீழ் அ முதல் ஔ வரை, க முதல் ன வரை, க் முதல் ன் வரை, ஆங்கில எழுத்துக்கள் சொல்லும்படி கேட்டறிந்தார். இதேபோன்று, மொட்டு என்ற பாடத்திட்டத்தின் கீழ் 3 மற்றும் 4ம் வகுப்பு மாணவ, மாணவிகளிடம் கணிதம் பாடத்தில் கூட்டல், கழித்தல் போன்ற கணக்குகளை கரும்பலகையில் போட்டு காட்டும்படி கேட்டு, விடையளித்தவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார். மேலும், மாணவ, மாணவிகளை கதைகளை சொல்லியும், பாட்டு பாடும் படியும் கேட்டறிந்தார்.

இதனைத் தொடர்ந்து, ஆசிரியரின் கையேடு மற்றும் செயல்முறை புத்தகங்களை மாவட்ட கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மாணவ, மாணவியர்கள் கற்றலுடன் கலைநய பொருட்கள் செய்யப்பட்டுள்ளதை அவர் பார்வையிட்டார். வகுப்பறையில் குழந்தைகள் மகிழ்ச்சியாகவும் மன அழுத்தமின்றியும் இருப்பதற்கு பள்ளி ஆசிரியர்களிடம் மாணவ, மாணவிகளுக்கு தகுந்தாற்போல கல்வியை கற்பிக்குமாறு அறிவுறுத்தினார். மேலும், மாணவ, மாணவிகளிடம் மாவட்ட ஆட்சித் தலைவர் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் மற்றும் மதிய உணவு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உணவு, முட்டை குறித்து கேட்டறிந்த போது, வீட்டில் சாப்பிடுவதை விட பள்ளியில் தரப்படும் உணவு ருசியாக இருப்பதாக மாணவ, மாணவிகள் தெரிவித்தனர். பள்ளிகளில் கழிவறை கட்டப்பட்டு வருவதை ஆய்வு மேற்கொண்டு, கழிவுநீர் தொட்டி உடனடியாக அமைத்திடுமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

தொடர்ந்து, மலாலிநத்தம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் வருகை பதிவேட்டினை ஆய்வு மேற்கொண்டு, குழந்தைகளுக்கு வண்ணம் பற்றி அறிந்து கொள்வதற்கு காய்கறிகளின் நிறங்களை சொல்லி தருமாறு அறிவுறுத்தினார். மேலும், மலாலிநத்தம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் அருகில் பயன்பாடின்றி உள்ள பழைய நியாய விலைக் கடை கட்டிடத்தை இடித்து அப்புறப்படுத்துமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

சோகண்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள் கட்டப்பட்டு வருவதை அவர் பார்வையிட்டு, பள்ளி வளாகத்தில் தண்ணீர் தேங்காதவாறு சமன் செய்திடுமாறு அறிவுறுத்தினார். இந்த ஆய்வுகளில், மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்க கல்வி) அரவிந்தன் மற்றும் ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். குழந்தைகள் தங்களின் கற்றல் நிலைக்கு ஏற்றவாறு ஆரம்ப கல்வி பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு ‘அரும்பு’, ‘மொட்டு’, ‘மலர்’ என வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. மாணவ, மாணவிகளிடம் கணிதம் பாடத்தில் கூட்டல், கழித்தல் போன்ற கணக்குகளை கரும்பலகையில் போட்டு காட்டும்படி கேட்டு, விடையளித்தவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார்.

You may also like

Leave a Comment

seventeen + fourteen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi