திருஉத்தரகோசமங்கையில் வராஹி அம்மன் கோயிலில் ஆஷாட நவராத்திரி துவக்கம்

ராமநாதபுரம், ஜூன் 19: திருஉத்தரகோசமங்கை சுயம்பு மகா வராஹி அம்மன் கோயிலில் 9 நாள் ஆஷாட நவராத்திரி சிறப்பு பூஜைகளுடன் நேற்று மாலை தொடங்கியது. ராமநாதபுரம் அருகே திருஉத்தரகோசமங்கையில் மிகப் பழமையான சிவன்கோயிலான மங்களேஸ்வரி உடனுரை மங்களநாதர் கோயில் உள்ளது. இதன் வடக்கு பகுதியில் வராஹி அம்மனுக்கு தனி கோயில் உள்ளது. இதிலுள்ள அம்மன் சுயம்புவாக உருவாகியதால் ஒற்றைக்கல்லில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் ஆண்டு தோறும் ஆனி மாதத்தில் வரக்கூடிய முதல் வளர்பிறையில் வராஹி அம்மன் கோயில்களில் ஆஷாட நவராத்திரி தொடங்கி 9 நாட்கள் கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி திருஉத்தரகோசமங்கையில் நேற்று கணபதி ஹோமத்துடன் துவங்கியது. அம்மனுக்கு அதிகாலை, நண்பகல், இரவு என 3 முறை பால், சந்தனம், பஞ்சாமிர்தம், இளநீர் உள்ளிட்ட 18 வகை பொருட்களால் அபிஷேகமும், புதிய அலங்காரமும் செய்யப்பட்டது.

இதுபோன்று இனிப்பு அலங்காரம், மஞ்சள் அலங்காரம், குங்குமம் அலங்காரம், தேங்காய்பூ, மாதுளை, நவதானியம், வெண்ணெய், காய்கனி உள்ளிட்ட அலங்காரங்கள் என ஒவ்வொரு நாட்களாக 8 நாட்களும், 9வது நாளான 26ம் தேதி வளையல், வடை மற்றும் மலர் அலங்காரமும் செய்யப்படும். ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தானம், தேவஸ்தானம் நிர்வாகம் சார்பில் திவான் பழனிவேல்பாண்டியன் செய்து வருகிறார்.

Related posts

திருவேற்காடு எஸ்.ஏ. கல்லூரியில் போதைப் பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு

அரசு அலுவலகங்களில் ‘தமிழ் வாழ்க’ மின்னொளி பெயர்ப்பலகை பழுது: சீரமைக்க கோரிக்கை

மின் ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்