Saturday, July 6, 2024
Home » திராவிட தூண் அமைக்க முதல்வர் உழைக்கிறார்: பேரவையில் அமைச்சர் எ.வ.வேலு புகழாரம்

திராவிட தூண் அமைக்க முதல்வர் உழைக்கிறார்: பேரவையில் அமைச்சர் எ.வ.வேலு புகழாரம்

by kannappan

சென்னை: சட்டப் பேரவையில் நேற்று பொதுப்பணித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலளித்து அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது: 2001ம் ஆண்டில் 52 லட்சம் வாகனங்கள் தான் தமிழகத்தில் இருந்தது. இன்றைக்கு ஒப்பிட்டு பார்க்கும் போது 20 ஆண்டுகாலத்தில் 6 மடங்கு அதாவது 2 கோடியே 95 லட்சம் வாகனங்கள் உள்ளது. 2001ல் 58 ஆயிரம் கி.மீட்டராக இருந்த சாலை 20 ஆண்டுகள் கழித்து 63 ஆயிரமாக தான் இருக்கிறது. சாலைகளின் வேகம் ஆமை வேகத்தில் இருக்கிறது. சென்னை மாநகராட்சி மேயராக இருந்த போது போக்குவரத்து நெரிசலை குறைக்க ஒரே நேரத்தில் 10 பாலங்களை கட்டி சாதனை படைத்தவர் முதல்வர். சாலைகள் பற்றியும், பாலங்கள் பற்றியும் அறிந்தவர். அதனால் தான் இந்த ஆண்டு கிட்டத்தட்ட ரூ.12,718.91 கோடி நெடுஞ்சாலைத்துறைக்கு ஒதுக்கியுள்ளார்.சாலைகளின் ஓரம் மரத்தை வெட்டினால் அதே இடத்தில் மரங்களை நட வேண்டும் என்று முதல்வர் ஆணை பிறப்பித்ததன் விளைவாக தான் சாலைகளின் இரு புறங்களிலும் மரங்களை நடும் பணியில் ஈடுபட்டுள்ளோம். மாவட்டங்களில் ஒப்பந்தத்தை ஒரு ஒப்பந்ததாரருக்கு வழங்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என்று முதல்வர் ஆணையிட்டதின்படி அதை விலக்கிக் கொண்டோம். சென்ற ஆண்டு ஒப்புதல் அளிக்கப்பட்டு நிலுவையில் இருந்த பணிகளின் மதிப்பு ரூ.37,608 கோடி. நமது முதல்வர் யாரையும் பகைவராக நினைப்பதில்லை. எனவே, தான் ரூ.9,958 கோடி நீங்கள் எடுத்த பணிக்காக இந்த அரசு கொடுத்துள்ளது. மொத்தம் ரூ.12,688 கோடி பழைய வேலைக்கே சென்றுவிட்டது.  மேடவாக்கம் மேம்பாலம் பணியும், வேளச்சேரி பாலப்பகுதி முடியும் தருவாயில் உள்ளது. இரண்டொரு தினங்களில் பாலத்தை திறக்க உள்ளோம். மத்திய கைலாஷ் மேம்பாலம் விரைவில் முடிக்கப்படும். 2,140 கி.மீட்டர் நீளம் உள்ள ஒன்றிய மற்றும் ஊராட்சி சாலைகள் இதர மாவட்ட சாலைகளாக ரூ.1,950 கோடி செலவில் தரம் உயர்த்தப்படும். பழைய மாமல்லபுரம் சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் 5 சந்திப்புகளில் மேம்பாலம் அமைக்கும் திட்டம் அரசின் பரிசீலனையில் உள்ளது. சட்டமன்றத்தில் உறுப்பினர்கள் முதலமைச்சரை புழந்தால் அதற்கு அவர் தடை போடுகிறார். யாரும் பேச வேண்டாம் என 2 முறை சொல்லிவிட்டார். அமைச்சர்கள் பாராட்டினால் ஆட்சிப்பணியை பாருங்கள். என்னை பாராட்டுவது தான் உங்களது வேலையா என்று அமைச்சர்களுக்கு சொல்கிறார்.ஆனால், ஜனநாயகமே உங்களை பாராட்டுகிறதே. ஜனநாயகத்தின் நான்கு தூண்களும் உங்களை பாராட்டுகிறதே. பதவிக்கு வந்த மிகக்குறுகிய காலத்தில் இத்தகைய சாதனைகளை புரிந்தது பாராட்டுக்குரியது என தமிழக ஆளுநர் பாராட்டியுள்ளார். கூட்டாட்சிக்கு ஆபத்து வரும்போதெல்லாம் முதல் குரல் கொடுப்பவர் மு.க.ஸ்டாலின்தான் என்று கேரள முதல்வர் குறிப்பிடுகிறார். தனது இலக்கில் சரியாக போராடக்கூடியவர் மு.க.ஸ்டாலின் என்று மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி பாராட்டுகிறார். சட்டமன்றம், நிதிநிலை அறிக்கையில் உள்ளதை பார்த்து முன்னாள் சபாநாயகர் தனபால் இந்த சட்டமன்றத்திலேயே பாராட்டினார். இந்த சட்டமன்றம் கண்ணியத்துடன் நடைபெறுகிறது, அரசு பணிகளை சீரோடும், சிறப்போடும் செய்கிறது என்றும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பாராட்டுகிறார். கொரோனா தடுப்பு குறித்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பாராட்டியதும் காணாத காட்சியாக உள்ளது. அனைத்து தலைவர்களும் பாராட்டுவதை பார்த்துக்கொண்டிருக்கிறோம். நீதிபதிகளும் பாராட்டி வருகிறார்கள். தினகரன் உள்ளிட்ட முக்கிய பத்திரிகைகள் பாராட்டி வருகிறது. 4 தூண்களும் முதல்வரை பாராட்டி வருகிறது. முதல்வர் திராவிட தூண் அமைக்க நாளும் உழைத்துக் கொண்டிருக்கிறார். இவ்வாறு பேசினார். * கண்கலங்கிய எ.வ.வேலுபொதுப்பணித் துறை மானியக் கோரிக்கை மீது அமைச்சர் எ.வ.வேலு பதிலளித்தார். அப்போது தனது துறை சார்பாக தமிழகம் முழுவதும் கட்டப்படும் கட்டிடங்களை வரிசைப்படுத்தினார். அதில், சென்னை மெரினா கடற்கரையில் கட்டப்படும் கலைஞரின் நினைவிடம் கட்டுமான பணி குறித்து பேசுகையில், ‘சென்னை மெரினா கடற்கரையில் 2.21 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.39 கோடியில் கலைஞருக்கு நினைவிடம் அமைக்கும் பணி இன்றைக்கு நடந்துகொண்டிருக்கிறது. கலைஞரால் எம்.எல்.ஏ. ஆனவர்கள் 500 பேருக்கும் மேல் இருப்பார்கள். எம்.பி.க்கள் ஆனது 200 பேருக்கும் மேல் இருப்பார்கள். அமைச்சர்கள் ஆனது 100 பேருக்கும் மேல் இருப்பார்கள். ஆனால், அத்தனை பேருக்கும் கிடைக்காத வாய்ப்பை எனக்கு அவர் கொடுத்ததற்காக காலம் உள்ளபடியே அவருக்கு நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்’ என்றார். அப்போது, அவர் நெகிழ்ச்சியினால் கண்கலங்கினார். குரலும் கம்மியது. ஆனாலும் அதை சமாளித்து தொடர்ந்து தனது உரையை நிகழ்த்தினார்….

You may also like

Leave a Comment

ten − 3 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi