சென்னை: தமிழகத்தில் ஏற்பட்ட புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணத்தை கூட தமிழக அரசால் மத்திய அரசிடம் இருந்து வாங்க முடியவில்லை என்று உதயநிதி ஸ்டாலின் குற்றம்சாட்டி உள்ளார். திமுக வேட்பாளர்கள் தாயகம் கவி, ஆர்.டி.சேகர், ஜான் எபினேசர் ஆகியோரை ஆதரித்து திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சென்னையில் பல்வேறு இடங்களில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில், ‘ஆர்.கே.நகர் தொகுதி மக்கள் கடந்த இடைத்தேர்தலில் ஏமாந்து விட்டீர்கள். மீண்டும் ஏமாந்து விடாதீர்கள். தாய்மார்கள் முடிவு எடுத்தால் ஒன்று செய்யமுடியாது. இன்னும் 10 நாட்கள் தான் உள்ளது. நீங்கள் இதே உற்சாகத்துடன் வாக்களிக்க வேண்டும். நமக்கு ஜிஎஸ்டி மூலம் 15 ஆயிரம் கோடி ரூபாய் மத்திய அரசிடம் இருந்து வரவேண்டும். அதுவும் தரவில்லை. புயல் மழை காலங்களில் பாதிப்புகள் ஏற்பட்டது. அதற்கு சேரவேண்டிய நிவாரண தொகையை கூட மத்திய அரசிடம் இருந்து அதிமுக அரசால் கேட்டு வாங்க முடியவில்லை. திமுக தேர்தல் அறிக்கையில் கொரோனா நிவரான தொகை ரூ.4 ஆயிரம், ஆட்சிக்கு வந்ததும் ஜூன் 3ம் தேதி வழங்கப்படும். பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். மாணவர்கள் கல்விக்கடன் தள்ளுபடி செய்யப்படும். நீட் தேர்வு ரத்து செய்யப்படும். இப்படி பல்வேறு திட்டங்களை நிறைவேற்ற உள்ளோம், என்றார். அதை தொடர்ந்து, காசிமேடு சி.ஜி.காலனி பகுதியில் பிரசாரம் செய்தார். பின்னர் ராயபுரம் தொகுதி திமுக வேட்பாளர் ஐட்ரீம்ஸ் மூர்த்தியை ஆதரித்து வண்ணாரப்பேட்டை ஜி.ஏ.சாலையில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்….