திருமங்கலம்: தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தால் திருமங்கலத்தில் உள்ள உழவர் சந்தை புதுப்பொலிவு பெற்றுள்ளது. காய்கறிகள் குறைந்த விலைக்கு கிடைப்பதால், பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் வாங்கிச் செல்கின்றனர். திருமங்கலத்தில் உள்ள சந்தைப்பேட்டை பகுதியில் உழவர்சந்தை உள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில், போதிய பராமரிப்பு இல்லாமல் உழவர்சந்தை பெயரளவில் இயங்கி வந்தது. இதனால், விவசாயிகள் சந்தைக்கு காய்கறிகளை கொண்டு வந்து விற்க தயக்கம் காட்டினர். இந்தநிலையில், தமிழகத்தில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டு திமுக ஆட்சிக்கு வந்தபின் உழவர்சந்தை புதுப்பொலிவு பெறத் தொடங்கியுள்ளது.கடந்த 20 ஆண்டுகளாக தண்ணீர் வசதி இல்லாத உழவர் சந்தையில் தற்போது புதியதாக போர்வெல் போடப்பட்டு, தண்ணீர் வசதி செய்து தரப்பட்டுள்ளது. சேதமடைந்த கழிப்பறைகள் சீரமைக்கப்பட்டுள்ளன. சந்தையில் விற்பனையை அதிகரிக்க, உழவர் சந்தை அதிகாரிகள் திருமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கிராமங்களுக்கு சென்று விவசாயிகளிடம் நேரடியாக பேசியதை தொடர்ந்து தற்போது மீண்டும் திருமங்கலம் உழவர்சந்தை புதிய பொலிவை பெற்றுள்ளது. தக்காளி, கத்திரி, வெண்டை, புடலங்காய், பூசணி, அவரை, சுரைக்காய், கொத்தவரை, முருங்கை உள்ளிட்ட காய்கறிகள் கிராமங்களிலிருந்து விவசாயிகளே கொண்டு வந்து நேரடியாக திருமங்கலம் உழவர் சந்தையில் விற்பனை செய்யத் தொடங்கியுள்ளனர்.இவர்களுக்கு தேவையான மின்சார தராசு, எடை கற்கள் ஆகியவற்றை உழவர் சந்தையில் இருப்பதால் விவசாயிகள் நேரடியாக பொதுமக்களிடம் விற்க தொடங்கியுள்ளனர். குறைந்த விலைக்கு காய்கறிகள் கிடைப்பதால், கடந்த சில வாரங்களாக திருமங்கலம் உழவர் சந்தைக்கு பொதுமக்கள் அதிகளவில் வருகின்றனர். தோட்டத்திலிருந்து காய்கறிகள் பிரஸாக கிடைப்பதால் பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் வாங்கி செல்கின்றனர்.காய்கறிகளை கொண்டு வர அரசு பஸ்உழவர்சந்தை அதிகாரிகள் கூறுகையில், ‘கிராமங்களுக்கு சென்று விவசாயிகளை நேரில் பேசி அழைத்து வந்தோம். விவசாயிகள் தங்கள் பகுதிகளிலிருந்து திருமங்கலம் உழவர் சந்தைக்கு காய்கறிகளை கொண்டு வருவதற்கு அரசு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. இது தொடர்பாக போக்குவரத்து கழகத்தில் பேசி வருகிறோம். சந்தையில் விற்பனையாகும் காய்கறிகளின் விலைகள் குறித்து மைக்செட் மூலம் அறிவிப்பு செய்யப்படுகிறது. இது தவிர உழவர் சந்தையின் ஒரு பகுதியில் ஆவின் பால் பண்ணை, பழங்கள் விற்பனையும் செய்யப்படுகிறது. நகர பொதுமக்கள் இதனை பயன்படுத்தி கொள்ள வேண்டும்’ என்றனர்.இடநெருக்கடி இல்லைபொதுமக்கள் கூறுகையில், உழவர் சந்தை மீண்டும் முழுமையாக இயங்க தொடங்கியுள்ளது மகிழ்ச்சியானது. திருமங்கலம் மார்க்கெட் இடநெருக்கடியில் செயல்படுகிறது. உழவர் சந்தை விசாலமாக உள்ளது. நாட்டுக்காய்கறிகள் அதிகளவில் கிடைப்பதால், இங்கு வந்து காய்கறிகள் வாங்கி செல்கிறோம்’ என்றனர். ஆட்சி மாற்றத்தால் புது பொலிவு பெற்றுள்ள திருமங்கலம் உழவர் சந்தை தனது சேவையை தொடர்ந்து செயல்பட, கூடுதல் முயற்சிகளை மாவட்ட நிர்வாகத்துடன் பொதுமக்களும் ஒத்துழைப்பு தரவேண்டும்….