திண்டுக்கல் மாவட்டத்தில் நீர்வடிப்பகுதி கிராமங்களில் ஆய்வு

 

திண்டுக்கல், ஆக. 24: திண்டுக்கல் மாவட்டத்தில் வேளாண்மை உழவர் நலத்துறையின் கீழ் செயல்படும் மாவட்ட நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமையின் மூலம் பிரதம மந்திரி விவசாய நீர்ப்பாசன திட்டம் (PMKSY-WDC-2.0) சாணார்பட்டி, வடமதுரை, வேடசந்தூர், தொப்பம்பட்டி, குஜிலியம்பாறை வட்டாரங்களில் உள்ள 33 நீர்வடிப்பகுதி கிராமங்களில் ஊராட்சி தலைவர்கள் தலைமையில் உள்ள நீர்வடிப்பகுதி குழுக்கள் மூலம் 2021-2022ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக பேராசிரியர்கள் தலைமையிலான மதிப்பீட்டு குழுவினரால் இத்திட்டத்தில் இயற்கை வள மேம்பாட்டு பணிகள் இனத்தில் தடுப்பணை அமைத்தல், பண்ணைக்குட்டை அமைத்தல், நீர்செறிவூட்டும் குழிகள் அமைத்தல், அமுங்கு குட்டை அமைத்தல் போன்ற பணிகளும், பண்ணை உற்பத்தி பணிகள் இனத்தில் பழத்தோட்டம் அமைத்தல், வனக்கன்றுகள் விநியோகம், தார்பாலின் விநியோகம், தெளிப்பான்கள் விநியோகம், தீவனப்புல் வெட்டும் கருவி விநியோகம் போன்ற பணிகளும், வாழ்வாதார மேம்பாட்டு பணிகள் இனத்தில் தையல் இயந்திரம் வழங்கப்பட்ட பயனாளிகளிடமும் சுழல் நிதி வழங்கப்பட்ட சுயஉதவி குழுவினரிடமும் திட்ட பணிகள் குறித்து கலந்தாய்வு மற்றும் மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டது.

மேலும் நீர்வடிப்பகுதியில் மக்கள் பங்கேற்புடன் கூடிய திட்டம் ஆரம்பித்த போது மற்றும் 3 ஆண்டுகள் கழித்து கிராமங்களில் செயல்படுத்தப்பட்ட பிறகு திட்ட விபரங்களுடன் கூடிய கிராமப்புற மதிப்பீடு மற்றும் காலநிலை, பயிர் பருவங்கள், பயிர்கள் பற்றிய வரைபடம் வரைந்து விவசாயிகளுக்கு நீர் சேமிப்பு, பயிர் சாகுபடி மற்றும் பயிர் அறுவடை பற்றியும் எடுத்து கூறி பொருளாதாரத்தை மேம்படுத்துதல் பற்றிய விளக்கம் அளிக்கப்பட்டது. இத்திட்டம் செயல்படுத்தப்படும் நீர்வடிப்பகுதிகளில் சம்பந்தப்பட்ட பயனாளிகளை அழைத்து மேற்கண்ட பணிகள் குறித்து இடைக்கால மதிப்பீடு தொடர்பான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வின் போது மாவட்ட நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமையின் வேளாண்மை துணை இயக்குநர் உமா, உதவிப் பொறியாளர் சகாயராஜ் மற்றும் துறை அலுவலர்கள், விவசாயிகள் உடன் இருந்தனர்

Related posts

நங்கநல்லூரில் 2 திரையரங்கிற்கு சீல்

வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு கழிவுநீர் கால்வாயை தூர்வாரும் பணி 4,100 கி.மீ. தூரம் நிறைவு: குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குனர் தகவல்

மாடம்பாக்கத்தில் அடிப்படை வசதி கோரி அதிமுக 26ம் தேதி ஆர்ப்பாட்டம்: எடப்பாடி அறிவிப்பு