திண்டுக்கல் : திண்டுக்கல் தோட்டனுாத்து கிராமத்தில் நாளை முதல்வர் மு.க.ஸ்டாலினால் திறக்கப்பட உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமின் முன்னேற்பாட்டு பணிகளை உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.திண்டுக்கல் ஒன்றியம், தோட்டனுாத்து கிராமத்தில் புதிதாக இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த முகாமை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை திறந்து வைத்து குடியிருப்புகளை பயனாளிகளிடம் ஒப்படைக்கவுள்ளார். இதற்கான முன்னேற்பாட்டு பணிகளை உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அமைச்சர் கூறுகையில், ‘தோட்டனூத்துவில் புதியதாக இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் ரூ.17.17 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு பல்வேறு அடிப்படை வசதிகளுடன் கூடிய 321 வீடுகள், கட்டி முடிக்கப்பட்டுள்ளது. தோட்டனுாத்துவில் நாளை பிற்பகல் நடைபெறும் விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு முகாமை திறந்து வைத்து, குடியிருப்புகளை பயனாளிகளிடம் ஒப்படைக்கவுள்ளார். இதற்காக முகாமில் அமைக்கப்பட்டுள்ள குடியிருப்புகள், தெருக்கள், தெரு விளக்குகள், விழா நடைபெறும் இடத்தில் மேடை பணிகள், நுழைவு வாயில், பயனாளிகள் அமரும் பகுதியை பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது’ என்றார். இந்த ஆய்வின் போது கலெக்டர் விசாகன், கூடுதல் ஆட்சியர் தினேஷ்குமார், மாவட்ட எஸ்பி பாஸ்கரன், ஆர்டிஓ பிரேம்குமார், கிழக்கு தாசில்தார் சந்தனமேரி கீதா மற்றும் பொதுப்பணி துறை அலுவலர்கள், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்….