திண்டுக்கல்: திண்டுக்கல் வட்டார வேளாண்மை துறையில் அட்மா திட்டம் மூலம் அ.வெள்ளோடு கிராமத்தில் பயிர் கழிவு மேலாண்மை குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி முகாம் நடந்தது. வேளாண்மை உதவி இயக்குநர் பொ.போது தலைமை வகித்து பேசுகையில், ‘வேளாண்மை பயிர்கள் சாகுபடி செய்து மகசூல் அறுவடை செய்த பின் வீணாகும் பயிர் கழிவுகளை எரித்து காற்றினை மாசுபடுத்தாமல் மண் வளத்தை மேம்படுத்துவதற்கு பயன்படுத்தலாம்.
சாகுபடி செய்த பயிர்களின் தட்டைகள், இலைகள், பருத்தி செடிகள், கரும்பு தோகைகள், வைக்கோல், நெல் பதர்கள், தென்னை கழிவுகள் போன்ற பயிர் கழிவுகளை உரமாகவும், நிலப்போர்வையாகவும், மூடாக்காகவும் பயன்படுத்தி மண் வளத்தை மேம்படுத்த வேண்டும்’ என்றார். தொடர்ந்து செம்பட்டி தோட்டக்கலை கல்லூரி உதவி பேராசிரியர் அருண்குமார், வட்டார வேளாண்மை அலுவலர் அறிவழகன், வட்டார தொழில்நுட்ப மேலாளர் சரவணன் பயிற்சி முகாமில் பேசினர். உதவி தொழில்நுட்ப மேலாளர் கோபி நன்றி கூறினார்.