திண்டுக்கல்லில் பயங்கரம் டூவீலரை வழிமறித்து வாலிபர் வெட்டிக்கொலை

திண்டுக்கல், செப். 29: திண்டுக்கல் அருகே உள்ள பேகம்பூர் பூச்சிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் சம்சுதீன். இவரது மகன் முகமது இர்பான் (24). அதே பகுதியை சேர்ந்தவர்கள் முகமது அப்துல்லா (25), முகமது மீரான் (23). இவர்கள் முகமது இர்பானின் நெருங்கிய நண்பர்கள். இந்நிலையில் நண்பர்கள் மூவரும் ஒரே டூவீலரில் நேற்றிரவு திண்டுக்கல் பஸ் நிலையம் வந்துவிட்டு, வீட்டுக்கு திரும்பி சென்று கொண்டிருந்தனர். அப்ே்பாது சாரல் மழை பெய்ததால் சாலையில் ஆட்கள் நடமாட்டம் குறைவாக இருந்தது.

இந்நிலையில்பென்சனர் காம்பவுண்டு சாலையில் டூவீலரில் சென்ற அவர்களை பின்தொடர்ந்த மர்ம நபர்கள் முந்திச்சென்று வழிமறித்தனர். பின்னர் பட்டாக்கத்தியால் முகமது இர்பானின் தலையில் சரமாரியாக வெட்டினர். இதனை தடுத்த, முகமது அப்துல்லாவுக்கும் வெட்டு விழுந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த முகமது மீரான் அங்கிருந்து தப்பி ஓடினார்.

இதில் காயமடைந்த இருவரும் ரோட்டில் விழுந்தனர். பின்னர் மர்ம நபர்கள் முகமது இர்பானின் தலையை சிதைத்து படுகொலை செய்தபின் அங்கிருந்து தப்பினர். படுகாயமடைந்த முகமது அப்துல்லாவின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர், அவரை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து தகவலறிந்த திண்டுக்கல் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடாஜலபதி மற்றும் போலீசார் முகமது இர்பானின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். சம்பவ இடத்தில் கிடந்த முகமது இர்பான் ஓட்டி வந்த டூவீலர், கொலையாளிகள் விட்டுச்சென்ற பட்டாக்கத்தி உள்ளிட்டவற்றை கைப்பற்றினர்.

இதற்கிடையே, எஸ்.பி பிரதீப், டிஎஸ்பி சிபிசாய் சவுந்தர்யன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். தடயவியல் நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர். இந்த படுகொலை குறித்து வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், கொலை செய்யப்பட்ட முகமது இர்பானும், காயமடைந்த அவருடைய நண்பரும், ஏற்கனவே நடந்த திமுக பிரமுகர் பட்டறை சரவணன் கொலை வழக்கின் குற்றவாளிகள் என்பதும், இவர்கள் மீதான வழக்கு நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது.

எனவே பழிக்கு பழியாக இந்த கொடூர சம்பவம் அரங்கேறியதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். படுகாயமடைந்த முகமது அப்துல்லாவும் கொலை வழக்கில் தொடர்புடையவர் என்பதால், திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் அவருக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்த படுகொலை சம்பவம் நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

நிலக்கடலையில் கூடுதல் மகசூல் வேளாண்துறையினர் அட்வைஸ்

திருத்தங்கல்லில் மண்ணெண்ணெய் குண்டு வீசிய வழக்கில் 5 பேர் கைது

பிளாஸ்டிக் கழிவுகளால் கால்நடைகளுக்கு ஆபத்து