திண்டுக்கல், டிச. 25: திண்டுக்கல் மாவட்டத்தில் கூட்டுறவு நிறுவனங்களில் காலியாக உள்ள 67 உதவியாளர் மற்றும் இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கான தேர்வு திண்டுக்கல் ஜி.டி.என் கல்லூரியில் நேற்று நடைபெற்றது. தேர்வுக்கு 1675 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, 1609 பேருக்கு தேர்வு எழுத அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. இதில் 1431 பேர் நேற்று நடந்த தேர்வில் கலந்து கொண்டனர். தேர்வில் தேர்ச்சி பெறும் விண்ணப்பத்தார்கள், இரண்டாம் கட்டமாக நேர்முகத் தேர்வு நடைபெற உள்ளது.
எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவோருக்கு இன சுழற்சி அடிப்படையில் பணியிடம் வழங்கப்படும். நேற்று நடந்த தேர்வை திண்டுக்கல் மாவட்ட ஆள் சேர்ப்பு நிலையத்தில் தலைவரும் கூட்டுறவு மண்டல இணைப்பதிவாளருமான காந்திநாதன், முதன்மை தேர்வு கண்காணிப்பாளர், ஜி.டி.என் கல்லூரி முதல்வர் பாலகுருசாமி, தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் வெங்கடலட்சுமி, துணைப் பதிவாளர் மதி, உஷா நந்தினி, பாலமுருகன், ஆசைத்தம்பி ஆகியோர் ஆய்வு செய்தனர். மேலும் கூட்டுறவுத்துறை அலுவலர்கள் பணியாளர்கள் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் பணியாளர்கள் தேர்வு பணியினை மேற்கொண்டனர்.