புதுடெல்லி: நாடு முழுவதும் ரியல் எஸ்டேட் வர்த்தகம் செய்து வந்த யூனிடெக் நிறுவனத்தின் தலைவர் ரமேஷ் சந்திரா, இயக்குநர்கள் சஞ்சய் சந்திரா, அஜய் சந்திரா மீது நிதி மோசடி புகார் எழுந்தது. அவர்கள் மீது பண மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து, கைது செய்து திகார் சிறையில் அடைத்தனர். இதற்கிடையே, சஞ்சய், அஜய் சந்திரா சகோதரர்கள் திகார் சிறை அதிகாரிகள் உதவியுடன் அங்கேயே தனி அலுவலகம் நடத்தி சொத்துக்களை விற்பதாகவும், பரோல் அல்லது ஜாமீனில் வெளிவந்து, நீதிமன்ற உத்தரவை மீறி குழுமத்தின் நிறுவனர் ரமேஷ் சந்திராவை சந்தித்து பேசுவதாகவும் அமலாக்கத் துறை உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது. இதன் அடிப்படையில் திகார் சிறையில் உள்ள சஞ்சய், அஜய் சந்திரா சகோதரர்களை மும்பை ஆர்தர் ரோடு சிறை மற்றும் தலோஜா சிறைகளுக்கு மாற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவைத் தொடர்ந்து, போலீஸ் பாதுகாப்புடன் சந்திரா சகோதரர்கள் நேற்று ரயில் மூலம் டெல்லியிலிருந்து மும்பைக்கு அழைத்து வரப்பட்டு, சம்மந்தப்பட்ட இரு சிறைகளில் அடைக்கப்பட்டனர்….