அம்பத்தூர்: அம்பத்தூர் அடுத்த பாடி, வன்னியர் தெருவை சேர்ந்தவர் நிலவழகன் (46). அம்பத்தூர், கள்ளிக்குப்பம், பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் செந்தில் (35). கூலித் தொழிலாளிகள். நேற்று முன்தினம் நிலவழகன், செந்தில் ஆகியோர், அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலைக்கு சென்றனர். அங்கு, ஆஸ்பெட்டாஸ் கூரை மீது ஏறி தார் ஷீட் ஒட்டும் பணியில் ஈடுபட்டனர். அந்த நேரத்தில், திடீரென்று ஆஸ்பெட்டாஸ் கூரை உடைந்து இருவரும் கீழே விழுந்தனர். அவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். பின்னர் படுகாயமடைந்த 2 பேரையும் மீட்டு அம்பத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக நிலவழகன் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் நிலவழகன் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக கூறினர். செந்திலுக்கு தனியார் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. புகாரின்படி அம்பத்தூர் தொழிற்பேட்டை இன்ஸ்பெக்டர் மல்லிகா வழக்குப்பதிவு செய்து, தொழிலாளி இறப்பு குறித்து, கம்பெனி நிர்வாகத்திடம் தீவிரமாக விசாரிக்கிறார்….