திருவள்ளூர்: திருவள்ளூர் பகுதிகளில் தார்ப்பாய் போட்டு மூடாமல் அதிக பாரம் ஏற்றிச்சென்ற லாரிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. திருவள்ளூர் நகர பகுதிகளில் சவுடு மண் ஏற்றப்பட்ட லாரிகளில் தார்ப்பாய் போட்டு மூடப்படாமலும் அளவுக்கு அதிக பாரம் ஏற்றிச் செல்வதாகவும் திருவள்ளூர் வட்டார போக்குவரத்து அலுவலருக்கு புகார்கள் வந்தன. இதன்அடிப்படையில், சென்னை வடக்கு சரக இணை போக்குவரத்து ஆணையர் ரவிச்சந்திரன் உத்தரவின்படி, வட்டார போக்குவத்து அலுவலர் சு.மோகன் தலைமையில், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் கா.பன்னீர்செல்வம், கோ.மோகன், போக்குவரத்து போலீஸ் எஸ்ஐ சிவகுமார் ஆகியோர் சோதனை நடத்தினர். சுமார் 40க்கு மேற்பட்ட சரக்கு லாரிகளை ஆய்வு செய்தனர்.இதில் அளவுக்கு அதிகமான பாரத்துடன் மணல் மற்றும் பல்வேறு சரக்குகள் ஏற்றிச்சென்ற 6 டிப்பர் லாரிகளை பறிமுதல் செய்தனர். இதுபற்றி அறிந்ததும் வாகன உரிமையாளர்கள் வந்து விளக்கம் அளித்தனர். இனிமேல் தார்ப்பாய் போர்த்தி வாகனங்களை இயக்குவதாக உறுதி அளித்தனர். இதையடுத்து வட்டார போக்குவரத்து அலுவலர் சு.மோகன் உத்தரவின்படி, ரூ. 2 லட்சத்து 35 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு அனைத்து வாகனங்களும் விடுவிக்கப்பட்டது. வாகன ஆய்வாளர் கா.பன்னீர்செல்வம் கூறும்போது,’’மண் மற்றும் மணல் ஏற்றும் சரக்கு வாகனங்கள் கண்டிப்பாக தார்ப்போய் கொண்டு முழுவதுமாக மூடியிருக்கவேண்டும். அப்போதுதான் பின்னாடிவரும் வாகன ஓட்டிகளின் கண்களில் மாசு படாமல் செல்ல முடியும், விபத்துக்களை தடுக்க முடியும். இதை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்….